அறிஞர் அண்ணா முதல் அண்ணன் அழகிரி வரை.... வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் பயணம்
சென்னை: திமுகவின் சேலம் 'தூணாக' விளங்கிய மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் பயணம் சலசலப்புகளோடும் சர்ச்சைகளோடும் பயணித்த ஒன்று...
திமுகவில் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து பணியாற்றக் கூடிய திமுக தலைவர்கள் சிலர்தான்.. அந்த வகையில் பேராசிரியர் அன்பழகன், கருணாநிதி ஆகியோருக்கு அடுத்த நிலை தலைவராக இருந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். 1957ம் ஆண்டு திமுகவில் உறுப்பினராக இருந்தாலும் 1958ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு பதவியில் இருந்து வந்திருக்கிறார்.
குண்டர் சட்டம்
அதிமுகவின் தற்போதைய ஆட்சிக் காலத்தில் சிறைவாசத்தில் சிக்கிய திமுக பெருந்தலைகளில் வீரபாண்டி ஆறுமுகமும் முக்கியமானவர். இவர் மீது குண்டர் சட்டம் போட்டும் ஒரு கை பார்த்தார் முதல்வர் ஜெயலலிதா.
54 ஆண்டு கால பொதுவாழ்வு
சுமார் 54 ஆண்டுகால பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரரான வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக வைத்திருந்தவர் என்பது மிகையல்ல.. அதே நேரத்தில் சேலத்தில் அவருக்கு போட்டியாக எவரையும் வளரவிட்டதும் இல்லை. சேலத்தில் திமுக என்றால் தானும் தனது மகன்களும் மட்டுமே என்ற நிலையையும் உருவாக்கி வைத்திருந்தார்.
இறுதிக்கால சர்ச்சைகள்
வீரபாண்டி ஆறுமுகத்தைப் பொறுத்தவரை கட்சியில் சீனியர் என்பதால் கருணாநிதியுடன் மல்லுக் கட்டக் கூடியவர். இந்த சீனியாரிட்டியை மனதில் வைத்துக் கொண்டு கருணாநிதியும் கண்டு கொள்ளாமல்தான் இருந்து வந்தார். அதேபோல் திமுகவில் கருணாநிதி கோஷ்டியில்தான் தொடர்ந்தும் இருந்து வந்தார் அவர்.
'அண்ணன்' அழகிரி கோஷ்டி...
பேரறிஞர் அண்ணா தலைமை ஏற்று திமுகவில் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகம் தனது கடைசிகாலத்தில் அண்ணன் 'அ' என்றழைக்கப்படும் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி கோஷ்டியில் ஐக்கியமானது ஒரு சோகம் என்றுதான் சொல்ல வேண்டும். மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை அழகிரி நேரில் சந்தித்து தம் பக்கம் சாய்த்துக் கொண்டு போனார்.
6 பேர் கொலை வழக்கு
அதிரடி அரசியல்வாதியாக பெயரெடுத்த வீரபாண்டி ஆறுமுகம் 'அடாவடி' அரசியல்வாதியாகவும் இருந்தார். கடந்த திமுக ஆட்சியில் சேலத்தில் 6 பேர் கொல்லப்பட்ட வழகில் அவரது தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் தம்பி மகன் என்பதற்காகவே பாரப்பட்டி சுரேஷை ரொம்பவே ஆதரித்தவரும் வீரபாண்டி ஆறுமுகம்தான்! இந்த 6 பேர் கொலை சம்பவத்தில் பாரப்பட்டி சுரேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்று கருதியதாலேயே அவர் அழகிரி கோஷ்டிக்கும் போனார்
ஸ்டாலினை எதிர்த்து...
மு.க.ஸ்டாலினைத்தான் அடுத்த திமுக தலைவராக முன்னிலைப் படுத்தப்படும்போதெல்லாம், வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்கள் எப்படி ஏற்பார்கள்? என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. இந்நிலையில் மதுரையில் அழகிரி தனது படை பரிவாரங்களுடன் தனி கோஷ்டியாக செயல்பட சேலத்தில் வீரபாண்டியும் அழகிரி கோஷ்டியாகவே செயல்பட்டு வந்தார்.
தமக்குப் பிறகு சேலம் மாவட்டத்துக்கு திமுக செயலாளராக நான் கை காட்டுபவர்தான் நியமிக்கப்படுவார் என்றெல்லாம் கர்ஜனை செய்தவரும் இந்த வீரபாண்டி ஆறுமுகம்தான்! பின்னர் திமுகவின் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினை முன்னிறுத்துவதை மிகக் கடுமையாக எதிர்த்து அழகிரிக்கு ஆதரவாக பேசி பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார்!
நீக்கும் நிலை...
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி நிர்வாகிகளை தேர்வு செய்ய மு.க.ஸ்டாலின் முனைப்பு காட்டிய போது அவருடன் மல்லுக்கட்டிய இரண்டு மாவட்டங்கள் மதுரையும் சேலமும்தான்! சேலத்தில் திமுக இளைஞரணிக்கான விண்ணப்பங்களை தமது மகன் வீரபாண்டி ராஜாதான் வாங்குவார் என்று அறிக்கை வெளியிட உச்சகட்ட கோஷ்டிப் பூசலில் கடுப்பாகிப் போன கருணாநிதி, வேறுவழியில்லாமல் கட்சிப் பத்திரிகையான முரசொலியில் எச்சரிக்கைவிட வேண்டிய நிலைக்குப் போனது.
இந்த விவகாரத்தில் திமுகவை விட்டே வீரபாண்டி ஆறுமுகம் நீக்கப்படக் கூடும் என்ற நிலையே வந்தது. தமது கடைசி காலத்தில் தான் நேசித்த தலைவர் கருணாநிதியிடம் 'சங்கடங்களையும்' எரிச்சலையும் சந்தித்தவர் என்பது மறைக்க முடியாத ஒன்று.