2012ல் 119 பத்திரிக்கையாளர்கள் படுகொலை: சிரியா ஆபத்தான நாடு
வியன்னா: 2012ம் ஆண்டில் உலகம் முழுவதும் ஆண்டு 119 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.பி.ஐ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது அதிகபட்சமாக சிரியாவில் மட்டும் 36 பேர்வரை பலியாகியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தும் நாடு சிரியா
வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இன்டர்நேசனல் பிரஸ் இன்ஸ்டிடியூட், பத்திரிக்கையாளர்கள் குறித்த விபரங்களை சேகரித்து அளிக்கிறது. இந்த அமைப்பு அளித்துள்ள அறிக்கையின் படி, பத்திரிகை உட்பட மீடியாக்களில் பணிபுரிவோர்களுக்கு அச்சுறுத்தும் நாடாக சிரியா இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 119 பேர்
இந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் இதுவரை 119 ஊடகத்துறையினர் உயிரிழந்துள்ளனராம். 1997ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்த படுகொலைகளிலேயே இதுதான் அதிகம் என்கின்றது ஐபிஐ.
சிரியாவில் 36 பேர் கொலை
2012ம் ஆண்டில் சிரியாவில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பிப்ரவரி மாதம் சிரியாவில் அரசுக்கு ஆதரவானவர்கள் நடத்திய தாக்குதலில் பிரபல பத்திரிக்கையாளர் மேரி கால்வின், பிரான்ஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டனர்.
சோமாலியாவில் 16 பேர்
இதற்கு அடுத்தபடியாக சோமாலியா நாட்டில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இரு நாடுகளும் ஊடகத்துறையினருக்கு ஆபத்தை விளைவிக்கும் நாடுகள் என்று வர்ணித்துள்ளது ஐபிஐ. இதற்கு அடுத்த இடங்களில் மெக்ஸிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஆண்டுதான் அதிகம்
கடந்த ஆண்டு 103 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டனர். 2009 ம் ஆண்டு அதிகபட்சமாக 110 பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ல் தான் அதிக அளவில் பத்திரிக்கையாளர்கள் கொள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.