கசாப் தூக்கோடு சரப்ஜித் சிங் விஷயத்தை தொடர்புபடுத்த மாட்டோம்: பாக். உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்
இஸ்லாமாபாத்: கசாப் தூக்கிலிடப்பட்ட விஷயத்தை பாகிஸ்தான் சிறையில் இருக்கும் மரண தண்டனைக் கைதியான சரப்ஜித் சிங் விஷயத்துடன் தங்கள் அரசு தொடர்புபடுத்தாது என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஏபிபி நியூஸிடம் கூறுகையில்,
கசாபை தூக்கிலிட்ட விவகாரத்தை சரப்ஜித் சிங் விவகாரத்துடன் தொடர்புபடுத்த மாட்டோம். பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிரான நாடாகும். யாராவது தீவிரவாத செயலில் ஈடுபட்டிருந்தால், அந்த தீவிரவாதி தனது முடிவை அடைவது தான் நியாயம் என்று நான் நினைக்கிறேன்.
கசாபின் உடலை அவரது குடும்பத்தார் கேட்டார்களா என்பது குறித்து அறிய இந்தியாவை பாகிஸ்தான் தொடர்பு கொள்ளும் என்றார்.
1990ம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்குள் ஊடுருவி உளவு பார்த்ததாகவும், குண்டு வெடிப்புக்கு சதி வேலை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்.
ஆனால் குடிபோதையில் வழி தவறி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்துவிட்டேன் என்பதுதான் சரப்ஜித் சிங்கின் வாதம். இந்நிலையில் சரப்ஜித் சிங் கடந்த 22 ஆண்டுகளாக லாகூரில் உள்ள லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க அவரது சகோதரி தல்பீர் கௌர் போராடி வருகிறார்.