வீரபாண்டியாருக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது மாஜி அமைச்சர் தமிழரசி கார் கவிழ்ந்தது: கணவர் படுகாயம்
மதுரை: நேற்று மரணம் அடைந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற திமுக முன்னாள் அமைச்சர் தமிழரசியின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தமிழரசியின் கணவர் படுகாயம் அடைந்தார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் நேற்று மரணம் அடைந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாவாரி கிராமத்திற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக முன்னாள் அமைச்சர் தமிழரசி, தனது கணவர் ரவிக்குமாருடன் மதுரை அய்யர்பங்களாவில் உள்ள தனது வீட்டில் இருந்து சேலத்திற்கு காரில் இன்று காலை புறப்பட்டார். காரை சிவக்குமார் என்பவர் ஓட்டினார். காலை 8 மணி அளவில் அவர்கள் கார் திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொடைரோட்டை அடுத்த பள்ளப்பட்டி பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கையில் மழை பெய்தது.
அப்போது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழந்தது. இதில் தமிழரசி காயமின்றி தப்பித்தபோதிலும் அவரது கணவரும், கார் டிரைவரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற நெடுஞ்சாலைத்துறை போலீசார் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.