வீரபாண்டியார் இறுதிச் சடங்கு.. பூலாவாரியில் குவிந்தனர் திமுக தலைவர்கள், தொண்டர்கள்!
பூலாவாரி கிராமத்தில் இப்போது வைக்கப்பட்டுள்ள வீரபாண்டியார் உடலுக்கு திமுக மற்றும் பிற கட்சித் தலைவர்களும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று காலை மரணம் அடைந்தார்.
75 வயதான அவர் அதிமுக அரசு போட்ட பல்வேறு வழக்குகளில் சிறைக்கு சென்று வந்தது முதல் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு மூச்சுத் திணறலும், நுரையீரலில் கோளாறும் இருந்தது.
இதற்காக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அங்கு நேற்று காலை 11 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவர் மறைந்த செய்தி அறிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் மற்றும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதன் பிறகு அவரது உடல் ஆம்புலன்ஸ் வேன் மூலம் நேற்று மாலை 6-55 மணிக்கு சேலம் பூலாவாரியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஆறுமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
நேற்று மாலை 7 மணி முதல் தொண்டர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தி.மு.க. காங்கிரஸ், பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிய கம்யூனிஸ்டு, தேமு.தி.க. உள்ளிட்ட கட்சி சார்ந்த, பிற கட்சியைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள், பிரமுகர்கள் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
விடிய - விடிய தலைவர்கள், தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்தனர் தலைவர்கள். இன்று காலையும் பூலாவாரியில் உள்ள அவரது வீட்டில் நீண்ட வரிசையில் பெண்கள், தி.மு.க. தொண்டர்கள். பொது மக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். சொந்த ஊர் மற்றும் பக்கத்து கிராம மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இன்று மாலை...
வீரபாண்டி ஆறுமுகத்தின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது. பூலாவாரியில் உள்ளஅவரது தோட்டத்தில் உடல் அடக்கம் நடக்கிறது. அவரது மகன் செழியன் என்ற நெடுஞ்செழியன் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகிலேயே வீரபாண்டியாரின் உடலும் அடக்கம் செய்யப்படுகிறது.
முக ஸ்டாலின்
முன்னதாக அவரது உடல் பூலாவாரியில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த இறுதி ஊர்வலத்தில் தி.மு.க.பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும். தி.மு.க. முன்னணி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். உடல் அடக்கம் முடிந்ததும் அனுதாப கூட்டம் நடக்கிறது.
வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் சேலம் நகரிலும், ஆத்தூர், தலைவாசல், வாழப்பாடி, இடைப்பாடி, கொங்கணாபுரம், மல்லலூர், மேட்டூர், ஓமலூர், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று 2-வது நாளாகவும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
நேற்றும் இன்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. சேலத்தில் நேற்று மதியம் முதல் தனியார் பஸ்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் மட்டும் ஓடுகின்றன.
பல பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.