ஆதீன வழக்கில் நித்தியானந்தா பதிலளிக்க மதுரை கோர்ட் உத்தரவு
மதுரை: மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதிக்கக் கோரி அருணகிரிநாதர் தொடர்ந்துள்ள வழக்கில் பதிலளிக்குமாறு நித்தியானந்தாவுக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தாவும், அவரது ஆட்களும் நுழைய தடை விதிக்கக்கோரி மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், மதுரை சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆதீன மடத்தின் 293வது இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். ஆதீன மடத்தை நிர்வகிக்க நானும், அவரும் சேர்ந்து ஒரு அறக்கட்டளை உருவாக்கினோம். அதனை மதுரை தெற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தோம். இந்நிலையில், இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டார். அந்த அறக்கட்டளை கலைக்கப்பட்டது.
எனவே அறக்கட்டளை பதிவை செய்ததை ரத்து செய்யுமாறு மதுரை தெற்கு சார்பதிவாளரிடம் மனு கொடுத்தோம். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அறக்கட்டளை பதிவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
மேலும் இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டதால், அவரும் அவரது ஆட்களும் ஆதீன மடத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் அருணகிரிநாதர்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் வழக்கு நீதிபதி குருவையா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார்.
மேலும் இந்த வழக்கில் முதல் முறையாக நித்தியானந்தா சார்பில் ஒரு வக்கீல் ஆஜரானார். அவர், அருணகிரிநாதர் மனுவுக்கு பதிலளிக்க நித்தியானந்தாவுக்கு அவகாசம் தர வேண்டும் என கேட்டார். அதையேற்று, அரசும், நித்தியானந்தாவும் பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை நவம்பர் 27க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.