மும்பை தாக்குதல் நினைவு தினம்; உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் மும்பைக்குள் ஊடுருவி சத்ரபதி சவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் மற்றும் ஒபராய் ஓட்டல்கள், லியோபோல்ட் கபே உள்ளிட்ட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
தாக்குதல் சம்பவம் நடைபெற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி மும்பையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா ஆளுநர் கே. சங்கரநாராயணன், முதலமைச்சர் பிரித்விராஜ் சவான், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷின்டே மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்ற தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கசாப்புக்கு தூக்கு
தாக்குதலின்போது 9 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அஜ்மல் கசாப் என்ற ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்த கசாப் கடந்த 21ம் தேதி புனே, எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
தலிபான்கள் எச்சரிக்கை
கசாபை தூக்கிலிட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்திய இலக்குகளை குறிவைத்து தாக்குவோம் என்று பாகிஸ்தான் தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகில் எந்தவொரு பகுதியிலும் இந்த தாக்குதல் நடக்கும் என்று டி.டி.பி. (தெஹ்ரீக் -ஐ-தலிபான் பாகிஸ்தான்) என்ற அமைப்பின் செய்தித்தொடர்பாளர் இசனுல்லா இசான் கூறியிருந்தார்.
இதனையொட்டி மும்பை மட்டுமல்லாது நாட்டின் முக்கிய தலைநகரங்களில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் பெருமளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் பிற முக்கிய கேந்திரங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் சோதனை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டன. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.