கலகக் குரல் எழுப்பிய ராம்ஜெத்மலானி சஸ்பென்ட்- பாஜக நடவடிக்கை
ஊழல் முறைகேடு புகாரில் சிக்கியிருக்கும் பாஜக தலைவர் நிதின் கத்காரி உடனே பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர் ராம்ஜெத்மலானி. இதேபோல் சிபிஐ இயக்குனரை பிரதமர் நியமித்த விவகாரத்தில் பாஜக தலையிட்டது தவறு என்று கருத்து தெரிவித்திருந்தார் ராம்ஜெத்மலானி.
இதைத் தொடர்ந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது. ராம்ஜெத்மலானி தற்போது மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருக்கிறார். மேலும் ராம்ஜெத்மலானியின் நடவடிக்கைகள் தொடர்பாக அக்கட்சியின் நாடாளுமன்ற குழு இன்று ஆலோசனை நடத்தவும் இருக்கிறது.
இக் கூட்டத்தில் ஜெத்மலானியை நிரந்தரமாக கட்சியை விட்டு நீக்க முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.