ஈவ்டீசிங் பிரச்சினை... தஞ்சையில் அதிமுக கவுன்சிலரின் அண்ணன் மகன் வெட்டி கொலை
தஞ்சாவூர்: ஈவ் டீசிங் விவகாரத்தில் தஞ்சாவூர் அதிமுக கவுன்சிலர் அண்ணன் மகனை 6 பேர் கொண்ட மர்மக்கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை நகராட்சி 7-வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்து வருபவர் அன்பு. இவரது அண்ணன் ஆசைத்தம்பியின் மகன் மணிகண்டன் (23). தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார்.
ஞாயிறு இரவு 8.30 மணிக்கு வாலிபர் மணிகண்டன் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தஞ்சை சரசுவதி மகால் அருகே 6 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனை வழிமறித்தனர். பின்னர் மணிகண்டன் தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே ஓடினார். ஆனாலும் மணிகண்டனை விடாமல் சுற்றி வளைத்து வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது.
உயிருக்கு போராடிய அவரை, அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிறிது நேரத்தில் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
படுகொலை சம்வம் குறித்து தஞ்சை மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ஈவ்டீசிங் தகராறில், மணிகண்டன் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
மணிகண்டனின் சித்தப்பாவின் மகளை தஞ்சை வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த வாலிபர் முத்து ஈவ்டீசிங் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் முத்துவை தட்டி கேட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது. இதில் இருந்து உதயகுமாருக்கும், மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தான் நேற்று இரவு மணிகண்டனை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளனர். ஆள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் நடைபெற்ற கொலை சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.