மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாம்: ஒரு யானைக்கு செலவு ரூ. 1,60,000
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையோரம் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று காலை துவங்குகிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் 32 கோயில் யானைகள், மடத்துக்கு சொந்தமான 4 யானைகள் என மொத்தம் 36 யானைகள் கலந்து கொள்கின்றன.
36 யானைகள்....
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் 48 நாள் புத்துணர்வு முகாம் நவம்பர் 26ம் தேதி ஆரம்பித்து ஜனவரி 12ம் தேதி நிறைவு பெறுகிறது. புத்துணர்வு முகாமிற்காக நேற்று காலை முதலே யானைகள் வரத்தொடங்கின. இந்த முகாமில் மொத்தம் 36 யானைகள் பங்கேற்கின்றன
5 ஏக்கரில் பயிற்சி முகாம்
பவானி ஆற்றங்கரையில் வனபத்திரகாளியம்மன் கோயில் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது. முகாமில் கலந்து கொள்ளும் யானைகள் காலை மற்றும் மாலையில் நடை பயிற்சி மேற்கொள்ள 650 மீட்டர் நீள பாதை அமைக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகளால் முகாமில் உள்ள யானைகளுக்கு இடையூறு நேர்ந்துவிடக் கூடாது என்பதால், முகாம் நடைபெறும் பகுதியை சுற்றிலும் கண்காணிப்பு விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சூரியசக்தி மூலம் இதற்கு மின்சாரம் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு யானைக்கு ரூ.1,60,000 செலவு
முகாமில் பங்கேற்கும் ஒரு யானைக்கு சராசரியாக 1,60,000 செலவழிக்கப்படும். இந்த யானைகள் முகாமிற்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் வழங்குகிறது. 48 நாட்கள் நடைபெறும் முகாமில் தினமும் காலை, மாலை என இரண்டு நேரம் பவானி ஆற்றில் குளியல் உண்டு. தினமும் இந்த யானைகளுக்கு சுமார் 20,000 கிலோ எடையுள்ள தீவனம் வழங்கப்படும். இத்துடன் 750 தென்னை மரங்களின் பசுந்தீவனம் வழங்கப்படும்.
வழக்கமான தீவனத்துடன் கேழ்வரகு மற்றும் அரிசி போன்ற தானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவும் வழங்கப்படும். தினமும் 5 கி.மீ. நடை பயிற்சியுடன் ஆயுர்வேத சிகிச்சையும் வழங்கப்படும். பார்வையாளர்கள் சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்து முகாம் யானைகளை பார்க்கலாம்.
முதுமலை யானைகளுக்கு தனியாக புத்துணர்வு முகாம்
முதுமலையில் உள்ள யானைகளுக்கு தனியாக புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி அங்கு சுற்றுலா பயணிகளுக்கு யானை சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.