புத்துணர்வு முகாமுக்கு வந்த இடத்தில் யானை 'பவானி' மரணம்- நாளை உடல் அடக்கம்
மேட்டுப்பாளையம்: யானைகளுக்கான புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வதற்காக வந்த ராமேஸ்வரம் கோவில் யானை பவானி உடல் நலக்குறைவால் மரணமடைந்தது. இதையடுத்து ராமேஸ்வரம் எடுத்துச் செல்லப்பட்ட யானையின் உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் அரசு சார்பில் ஆண்டுதோறும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு முகாம் இன்று தொடங்கியுள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோவில் யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 48 நாட்களுக்கு இந்த முகாம் நடைபெறும்.
அப்படி அழைத்து வரப்பட்ட யானைதான் பவானி. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கோவில் யானையான இது நேற்று மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தது. வந்தது முதலே அதற்கு உடல் நலம் சரியில்லை. இதையடுத்து வனத்துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பவானி உயிரிழந்தது.
இதையடுத்து யானை பவானியை ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த லாரியிலேயே எடுத்துப் போட்டு மீண்டும் ஊர் திரும்பினர். அங்கு நாளை ராமநாதசுவாமி கோவிலுக்குச் சொந்தமான ஈஸ்வரி அம்மன் கோவில் தோப்பில் வைத்து நாளை அடக்கம் செய்கின்றனர்.
இறந்த பவானிக்கு வயது 62 ஆகிறது. இந்த யானையை பிரபல ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவன அதிபர் ராமசாமி ராஜா அன்பளிப்பாக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.