உலகம் வெப்பமாகி வருவதால் பெரிதாகி வரும் உருளைக் கிழங்கு!
லண்டன்: உலகம் வெப்பமயமாகி வருவதால் உருளைக் கிழங்குகளின் சைசும் பெரிதாகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது என்ன புதுக் கதை.. தொடர்ந்து படியுங்கள்....
வெப்பத்தை ஈர்க்கும் கார்பன் டை ஆக்ஸைடு:
வாகனப் புகை, மரங்களை வெட்டித் தள்ளுதல், தொழிற்சாலை புகை என பல்வேறு காரணங்களால் பூமியில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த கார்பன் டை ஆக்ஸைடு வெப்பத்தை தன்னுள் ஈர்த்துக் கொள்வதால், பூமியின் வெப்பநிலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் ஆகிய துருவப் பகுதிகளில் பல ஆயிரம் கி.மீ. பரப்பில் பரந்து விரிந்துள்ள பனி மலைகள் உருகிக் கொண்டுள்ளன. இதெல்லாம் நமக்குத் தெரிந்த விவரங்கள் தான்.
உருளைக் கிழங்கின் அளவு பெரிதாகிறது...
இந் நிலையில் ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஹோச் ஜெஹ்ரேன் நடத்திய ஆய்வில் பூமி வெப்பமயமாகி வருவதால் உருளைக் கிழங்கின் அளவும் கூட அதிகரித்து வருவதைக் கண்டுபிடித்துள்ளார்.
வளரும் நாடுகளில் 5வது மிக முக்கிய உணவாக இருப்பது உருளைக் கிழங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்பன் டை ஆக்ஸைடு அளவு..
இப்போது நமது காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு 390 ppm (parts per million) என்ற அளவில் உள்ளது. இதுவே அதிகம் தான். இந்த அளவு வரும் 2100ம் ஆண்டில் 1000 ppm ஆக அதிகரிக்கும் என்று அரசுகளுக்கு இடையேயான காலநிலை மாற்றத்திற்கான குழு (Intergovernmental Panel on Climate Change- IPCC) எச்சரித்துள்ளது.
ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?:
இந் நிலையில் கார்பன் டை ஆக்ஸைடு அளவை 390 ppm, 760 ppm, 1140 ppm, 1520 ppm என்ற அளவுகளில் வைத்து ஆய்வகத்துக்குள் உருளைக் கிழங்கு செடிகளை வளர்த்துள்ளனர் விஞ்ஞானிகள். இதில், கார்பன் டை ஆக்ஸைட் 760 ppm என்ற அளவைக் கொண்டு வளர்க்கப்பட்ட செடியில் விளைந்த உருளைக் கிழங்கு வழக்கமான சைஸை விட 96 சதவீதம் பெரிதாக வீங்கியுள்ளது.
சத்து இல்லை...
அளவு தான் மிகவும் பெரிதாக இருந்ததே தவிர இந்த உருளைக் கிழங்குகளில் உள்ள சத்துக்களின் அளவு பெருமளவு குறைந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கார்பன் டை ஆக்ஸைட் அதிகரிக்க அதிகரிக்க விளையும் பொருட்களின் புரோட்டீன், வைட்டமின்கள் உள்ளிட்ட சத்துக்களின் அளவு குறைவது ஏற்கனவே தெரிந்தது தான். ஆனால், இப்போது இந்த உருளைக் கிழங்கு சோதனை இதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
அரிசி, கோதுமை, பார்லி, சோயா படும் பாடு!:
இந்த ஆய்வு முடிவுகள் அடுத்த மாதம் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடக்கும் அமெரிக்க புவி இயற்பியல் மாநாட்டில் முன் வைக்கப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து இது தொடர்பாக அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் ஆரம்பமாகும் என்று தெரிகிறது. குறிப்பாக அரிசி, கோதுமை, பார்லி, சோயா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கார்பன் டை ஆக்ஸைடால் என்ன பாடுபடுகின்றன என்ற ஆராய்ச்சிகள் ஆரம்பமாகவுள்ளன.