திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது - லட்சக்கணக்கானோர் தரிசனம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபத்திருநாளை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
பஞ்சபூதங்களை குறிக்கும் பரணி தீபம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது. இதன் தொடக்கமாக இன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகிய 5 பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. இதனையொட்டி அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாமி, அம்மனுக்கு பால், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
‘ஏகன் அநேகன்' என்பதை குறிக்கும் வகையில் 5 தீபங்களை ஒரே தீபமாக ஏற்றுவதுதான் பரணி தீபம் ஆகும். சிவாச்சாரியார்கள் பரணி தீபத்தை பக்தர்களிடம் காட்டியபோது அதனைக் கண்ட பக்தர்கள் "அண்ணாமலைக்கு அரோகா'' என்ற பக்தி முழக்கம் எழுப்பி வழிபட்டனர்.
இதன்பின்னர் பரணி தீபத்தை சாமி சன்னதியில் உட்புறபிரகாரத்தில் சுற்றி வைகுண்ட வாசல் வழியாக அம்மன் சன்னதிக்கு கொண்டு வந்து தீபம் ஏற்றினர். பின்னர் பரணி தீபம் காலபைவரர் சன்னதியில் வைக்கப்பட்டது.
6 மணிக்கு மகாதீபம்
11 மணி நடை சாத்தப்பட்டு பின்னர் மாலையில் நடை திறக்கப்பட்டது. அப்போது அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடி கோவில் கொடி மரம் முன்பு வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதையடுத்து சரியாக 6 மணிக்கு கோவிலில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.
அதே நேரத்தில் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மகாதீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொது மக்கள் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி மலையை நோக்கி வணங்கி விளக்கேற்றினர். அங்கு மட்டுமல்லாமல் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் இதே நேரத்தில் மக்கள் தீபமேற்றி வழிபட்டனர்.
மகா தீபம் ஏற்றப்பட்ட நிகழ்ச்சியை பல லட்சம் பேர் கண்டு தரிசித்து வழிபட்டனர்.
பக்தர்களுக்காக குடிநீர், கழிப்பிட வசதி போன்ற அடிப்படை தேவைகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. கிரிவல பாதையில் காவல் உதவி மையங்களும், மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தது. 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தீபத்திருநாளை ஒட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.