ரொம்ப சந்தோஷம் கலைஞரே... கருணாநிதிக்கு காங்கிரஸ் ஞானதேசிகன் நன்றி
சென்னை: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளது சந்தோஷம், மகிழ்ச்சி தருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது எந்த வகையிலும் சிறு வியாபாரிகளை பாதிக்காது என்ற உறுதிமொழியை மத்திய அரசு பலமுறை அளித்துள்ளது. எந்த காலக்கட்டத்திலும் அன்னிய முதலீட்டால் சிறு வியாபாரிகள் பாதிப்படையமாட்டார்கள் என்பது ஒருபக்கம் இருக்க, எந்த மாநிலம் தேவை என கருதுகிறதோ, அந்த மாநில அரசு அமல்படுத்திட வசதியான கொள்கை முடிவை மத்திய அரசு வகுத்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வாக்கெடுப்பு வந்தால் அந்த வாக்கெடுப்புக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு ஆதரவாகவும் திமுக. வாக்களிக்கும் என்று அறிவித்திருப்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கருணாநிதியின் இந்த அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறது, நன்றி தெரிவிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.