கரண்ட் இல்லை, காயும் வயிறுகள்... கஞ்சித் தொட்டி திறந்த பரிதாபத்துக்குரிய நெசவாளர்கள்
பல்லடம்: மனிதன் உயிர் வாழ்வதே அந்த சின்ன வயிறை நிரப்பத்தான். ஆனால் அந்த அடிப்படை உணவு கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்படும்போது என்ன செய்ய முடியும்...எப்படி வாழ முடியும். இன்று தமிழகத்தை வறுத்தெடுத்து வரும் மின்தடையால் அப்பாவி நெசவாளர்கள் பசியில் சாகும் நிலையை நோக்கி தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்களே கூடி கஞ்சித் தொட்டி திறக்கும் பரிதாப நிலை உருவாகி வருகிறது.
கஞ்சித்தொட்டி என்றால் என்ன?
வறுமை, ஏழ்மை, வேலையில்லாமை, பிழைக்க வழியில்லாமை.. இப்படி பல காரணங்களால் ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உறவினர்களோ, தெரிந்தவர்களோ உதவுவார்கள். ஒருவேளை பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி மக்கள் சேர்ந்து உணவு வழங்குவார்கள். ஒரு வேளை ஒரு கிராமமே பாதிக்கப்பட்டால் ஊரே ஒன்று கூடி அத்தனை பேருமாக சேர்ந்து கஞ்சி காய்ச்சி விநியோகித்து பசியாற்றுவார்கள். ஒருவேளை கஞ்சியாவது கிடைக்கட்டுமே என்ற ஆதங்கத்தில் செய்யும் உதவி அது.
அவல நிலையில் நெசவாளர்கள்
2001-06ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியில் இருந்தபோது விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். மதுரைப் பக்கம் டி. குன்னத்தூர், பேரையூர், சுப்புலாபுரம், ஜக்கம்பட்டி உள்ளிட்ட ஊர்களிலும், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலிலும் உள்ள கைத்தறித் தொழிலாளர்கள் பெரும் வேலையின்மையில் சிக்கினர். யாருக்குமே வேலை இல்லை. காரணம் கூலி கிடைக்காத நிலை. அரசோ கவனிக்காத அவலம். என்ன செய்வது என்று தெரியாமல், கையில் காசும் இல்லாமல் குமைந்து போன நெசவாளக் குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
கஞ்சித் தொட்டி திறந்த திமுக
இதைப் பார்த்த திமுகவினர் ஊர் ஊராக கஞ்சித் தொட்டி திறக்க ஆரம்பித்தனர். இது அதிமுகவினரை பரபரப்பில் ஆழ்த்தியது. இதற்குப் போட்டியாக எங்களது ஆட்சியில் மக்களை நன்றாக வைத்திருக்கிறார் அம்மா என்று கூறும் விதமாக பிரியாணி ஆக்கி மக்களுக்குப் போட்டு பாலிட்டிக்ஸைப் புகுத்தினர் அதிமுகவினர்.
மதுரையில் தாக்கப்பட்ட தா.கிருட்டிணன்
மதுரையில் திமுக சார்பில் கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டபோது அதிமுகவினரின் தாக்குலுக்குள்ளானார்கள் திமுகவினர். அப்போது உயிருடன் இருந்தவரான முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணை சுற்றி வளைத்து அதிமுகவினர் தாக்கினர். அவர் உயிருக்குப் பயந்து கஞ்சித் தொட்டிக்குப் பின்னால் போய் உட்கார்ந்து பதுங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். போலீஸார் தடுக்க முயலவில்லை. போலீஸாரும் சேர்ந்து தாக்கியதில் தா.கி. காயமடைந்தார். பிடிஆர் பழனிவேல்ராஜன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்றும் அவலத்தில் நெசவாளர்கள்
தற்போதைய ஜெயலலிதா ஆட்சியிலும் நெசவாளர்கள் அவதிப்படும் நிலை தொடர்கதையாகியுள்ளது. அப்போது கரண்ட் இருந்தது, கூலி கிடைக்கவில்லை. ஆனால் இப்போது மின்சாரமும் இல்லை, கூலியும் இல்லை. இருட்டறையில் தள்ளப்பட்ட நிலைக்கு அவர்கள் போய் விட்டனர்.
மீண்டும் உயிர்த்தெழுந்த கஞ்சித் தொட்டிகள்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்களது பாதிப்புகளை வெளிப்படுத்தும் விதமாக பல்லடம், சோமனூர் பகுதியில் கஞ்சித்தொட்டி திறக்கப்பட்டது. அப்போது, கூலி உயர்வை வலியுறுத்தி நடந்த ஸ்டிரைக் காரணமாக கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. பல்லடம் அருகே உள்ள ராசாக்கவுண்டம்பாளையம், சோமனூர் கிருஷ்ணாபுரம், செந்தில் நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சித்தொட்டி திறக்கப்பட்டது.
மக்களே திறந்த கஞ்சித் தொட்டி
தற்போது மக்களே கஞ்சித் தொட்டி திறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பல்லடம் அருகே கரைப்புதூர் கிராமத்தில், தடையில்லா மின்சாரம் வழங்க கோரி கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்று வட்டாரப்பகுதிகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
18 மணி நேர மின்தடையால் பரிதவிப்பு
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தினசரி 18 மணி நேர மின்வெட்டால் மின் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதனால் பல மணி நேரம் விசைத்தறிகள் இயங்காமல் இருந்து வருகின்றது. தொழிலாளர்கள் வேலை செய்ய தயராக இருந்தும், மின் தடை காரணமான வேலை இல்லாத நிலை நிலவி வருகின்றது.
அண்டாவில் கஞ்சி.. ஊசலாட்டத்தில் வாழ்வாதாரம்
இந்த நிலையில், பல்லடம் அருகே கரைப்புதூர் கிராமத்தில், தடையில்லா மின்சாரம் வழங்க கோரி கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரிய அண்டாவில் காய்ச்சப்பட்ட கஞ்சியை விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் டம்ளர்களில் வாங்கி குடித்தனர்.
மின்சாரம் இல்லாததாலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாலும் விசைத்தறி உரிமையாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்று திமுகவினரை அதிமுகவினர் கஞ்சித் தொட்டி திறந்ததற்காக அடித்து விரட்டி விட்டனர். இன்று நெசவாளர்களே திறந்துள்ளனர்... என்ன செய்யப் போகிறதோ அரசு!.