கிரெடிட் கார்டை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு பராக் பார்க்கலாமா?
கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்கள் அதை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு வேறு எங்காவது பராக் பார்க்கக் கூடாது. மாறாக கார்டை கடைக்காரர் எத்தனை முறை பயன்படுத்துகிறார் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். டெல்லியில் போலி கிரெடிட் கார்டுகள் தயாரித்து பல கோடி ரூபாய் சுருட்டிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் எவ்வாறு போலி கிரெடிட் கார்டுகள் தயாரித்தனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
தற்போது சிக்கியுள்ள 4 பேரும் பெரிய பெரிய கடைகளில் உள்ள காசாளர்களை கையில் போட்டுக் கொண்டு அவர்களுக்கு ஸ்கிம்மர் என்ற கருவியை கொடுத்துள்ளனர். காசாளர்களும் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டை கொடுத்தால் அதை கிரெடிட் கார்டு கருவியில் ஒரு முறை தேய்த்துவிட்டு யாருக்கும் தெரியாமல் நைசாக ஸ்கிம்மரிலும் ஒரு தேய் தேய்த்துள்ளனர். அந்த ஸ்கிம்மர் கருவி அந்த கிரெடிட் கார்டுகளின் விவரங்களை சேமித்து வைத்துக்கொள்ளும். பின்னர் அதில் உள்ள விவரங்களை வைத்து போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்துள்ளனர்.
அதனால் எப்பொழுது கிரெடிட் கார்டை பயன்படுத்தினாலும் அதை காசாளர் எத்தனை முறை பயன்படுத்துகிறார் என்பதை கவனிக்க வேண்டும் என்றார்.