புதிய மத சர்ச்சையில் சிக்கியது 'சபரிமலை தேவஸ்தானம்'
பம்பை: சபரிமலை தேவஸ்தானம் ஏதாவது ஒருசர்ச்சையில் சிக்கிக் கொள்வது என்பது வாடிக்கையாகி வருகிறது! தற்போது சபரிமலைக்கான வழித்தடம் பற்றிய தேவஸ்தான வெளியீடு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
சபரிமலை தேவஸ்தானத்தின் ஆண்டுக் குறிப்பேடு நேற்று வெளியிடப்பட்டது. அதில் ஜனவரி 14-ந் தேதி மகரஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் வரும்பாதை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை இல்லாத ஓர் இடமும், தடை செய்யப்பட்ட சில பாதைகளும் இடம் பெற்றிருக்கிறது என்கிறார் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய பொதுச்செயலாளர் கும்மன்னம் ராஜசேகரன்.
இது தொடர்பாக ராஜசேகரன் கூறுகையில், ராண்ணி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கடந்து வரும்வகையில் குறுக்குச் சந்திப்பாக அட்டத்தோடு என்ற இடத்தையும் தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், 'அட்டத்தோடு' கேரள வருவாய்த் துறையாலும் குறிப்பிடப்படவில்லை, அரசின் குறிப்பேடுகளிலும் இல்லை. ஒரு தனிநபராக கிறிஸ்துவர் ஒருவர் அந்த இடத்தில் ஒரு பெயரை வைத்துக்கொண்டு வருகிறார். அந்த இடத்தையும்கூட ஒரு வழிகாட்டி இடமாக குறிப்பேட்டில் குறித்துள்ளது தவறு என்கிறார் அவர்.
அத்துடன் அட்டத்தோடு இடத்தை குறிப்பேட்டில் இடம்பெறச் செய்தவர் யார் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்பதும் அவரது கோரிக்கை. இப்படியான சர்ச்சைக்குரிய இடங்களை இடம்பெறச் செயவது பின்னாளில் மத மோதல்களுக்கு வழிவகுக்கும் என்கிறார் ராஜசேகரன்.