உங்களால் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பு கேளுங்கள் மமதா பானர்ஜி: நீதிபதி கட்ஜூ காட்டம்
டெல்லி: ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காக இளம்பெண்களை கைது செய்த விவகாரத்தில் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ எழுப்பிய உரிமைக் குரல் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது. இப்பொழுது மார்க்கண்டேய கட்ஜூவின் கண்டனக் கணைகள் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது பாய்ந்திருக்கிறது.
இது தொடர்பாக மமதா பானர்ஜிக்கு மார்க்கண்டேய கட்ஜூ அனுப்பியுள்ள கடிதம்:
பால்தாக்கரே மறைவைத் தொடர்ந்து மும்பையில் முழு அடைப்பு மேற்கொள்ளப்பட்டதற்கு ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த பெண்ணை கைது செய்த மகாராஷ்டிரா போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
மன்னிப்பு கேளுங்கள்
அதேபோல் உங்களால் கைது செய்யப்பட்ட ஜவத்பூர் பல்கலைக் கழக பேராசிரிய மகாபத்ரா, சிலாதித்யா செளத்ரி (மமதாவுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கார்ட்டூன் போட்டு சிக்கியோர்) ஆகியோர் மீதான வழக்குகளைக் கைவிட்டுவிட்டு அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.. இதேபோல் நேர்மையான போலீஸ் அதிகாரியான தமயந்தி சென்னை மீண்டும் பணியில் அமர்த்துங்கள்.. நாம் அனைவருமே மனிதர்கள்தான்.. தவறு செய்யக் கூடியவர்களே... ஆனால் தாம் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கோருவதுதான் ஒரு நல்ல மனிதனுக்குரிய பண்பு. இதேபோல் சி.என்.என். ஐபிஎன் நிகழ்ச்சியில் உங்களால் அவமதிக்கப்பட்ட தான்யா பரத்வாஜிடமும் மன்னிப்பு கேளுங்கள்..
அச்சப்படும் அதிகாரிகள்
நான் கொல்கத்தா வருகை தரும்போதெல்லாம் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த உங்களது அமைச்சர்கள் தயங்குகின்றனர். அவர்கள் உங்களால் அச்சப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். இது ஒரு மாநில நலனுக்கு நல்லது அல்ல. இப்படி நீங்கள் செயல்படுவது என்பது ஒரு முதலமைச்சருக்கான தகுதியும் அல்ல.
கெளடில்யரும் கூட நல்ல ஆலோசகர்கள் அவசியம் என்கிறார். முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் கூட தமது அதிகாரிகளிடம் என்னதான் மாற்றுக் கருத்து இருந்தாலும் தெரிவியுங்கள் என்றுதான் கூறுவார்.
இந்தக் கருத்தை இப்போது உங்களுக்கு சொல்வது என்பது மிகவும் காலதாமதமான ஒன்று அல்ல..உங்கல் நலன்விரும்பி என்ற அடிப்படையில் சொல்கிறேன். உங்களை நான் ஒருகாலத்தில் மிகவும் பாராட்டியிருக்கிறேன். ஆனால் உங்களது சகிப்புத் தன்மை மிகவும் குறைந்துபோய்விட்டது என்பதுதான் உங்களை பிரச்சனைக்குள்ளாக்கியிருக்கிறது என்று கட்ஜூ அதில் கூறியுள்ளார்.
அடுத்து இனி எந்த சி.எம்மோ?