ஜெகன் விடுதலைக்காக காளஹஸ்தியில் நடிகை ரோஜா சிறப்பு பூஜை
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கியாக இருப்பவர் நடிகை ரோஜா. பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் அக்கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் விடுதலைக்காக சிறப்பு பூஜை செய்வதற்காக ரோஜா தனது குடும்பத்தினருடன் நேற்று காளஹஸ்தி கோவிலுக்கு வந்தார்.
அங்குள்ள வாயுலிங்கேஸ்வரர் சுவாமிக்கு ருத்ர அபிஷேகம் நடத்தினார். பின்னர் ராகுகேது பரிகார யாக பூஜையில் பங்கேற்றார். காலையில் இருந்து மதியம் வரை கோவிலில் தங்கி இருந்தார். ரோஜாவுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த பரிகார பூஜை குறித்து ரோஜா கூறுகையில்,
ராஜசேகர் ரெட்டியின் குடும்பத்தினர் மக்களுக்கு நல்லது செய்வதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அப்படி இருக்க ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராஜசேகர் ரெட்டியின் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினர் பல தொல்லை களுக்கும், கஷ்டங்களுக்கும் ஆளாகி உள்ளனர்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி மலரவும், ஜெகன் சிறையில் இருந்து விடுதலை ஆக வேண்டியும் காளஹஸ்தி கோவிலில் சிறப்பு பூஜை செய்தேன் என்றார்.