தான் தண்ணி அடிப்பதற்காக பள்ளிக்கே லீவு விட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்!
தர்மபுரி: மது போதையில் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் பள்ளிக்கூடத்திற்கு இன்று விடுமுறை என்று குடிபோதையில் அறிவித்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வேளாவள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. இந்தப் பள்ளிக்கூடம் மிக் சிறியது. 20 பேர் படித்து வருகிறார்கள். அங்கு தலைமை ஆசிரியையாக இருப்பவர் விமலா. இவர் வியாழக்கிழமை விடுமுறையில் போயிருந்தார். இதனால் அவருக்குப் பதில் ஆரோக்கியசாமி என்பவர் மாற்று ஆசிரியராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கூடத்திற்கு வந்தவர். வந்தவர் பசங்களுக்குப் பாடம் எடுக்காமல் மது பாட்டிலுடன் பள்ளியில் ஒரு ஓரமாக உட்கார்ந்த ஆற அமர குடித்தார். இதைப் பார்த்த மாணவர்கள், காலங்காத்தாலேயே வாத்தியார் இப்படி தண்ணி அடிக்கிறாரே என்று அதிர்ந்து போய் வேடிக்கை பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு காலையில் வந்த ஆசிரியர் மறுபடியும் நல்ல குடிபோதையில் இருந்துள்ளார். வந்தவர் பள்ளிக்கு வந்திருந்த மாணவர்களைப் பார்த்து, பசங்களா, கார்த்திகை தீபம்டா இன்னிக்கு, அதனால பள்ளிக்கூடத்திற்கு லீவு என்று கூறி அனைவரையும் விரட்டியுள்ளார். இதையடுத்து மாணவர்களும் ஹோவென கத்தியபடி வீடுகளுக்கு ஓடி விட்டனர்.
அதன் பின்னர் வகுப்பறைக்குப் போன ஆரோக்கியசாமி அங்கு உட்கார்ந்து நிதானமாக மது அருந்தியுள்ளார். மாணவர்கள் திடீரென வீட்டுக்கு வரவே சந்தேகமடைந்த பெற்றோர்கள் என்ன ஏது விசாரித்தனர். ஆரோக்கியசாமி லீவு விட்டு விட்டதாக அவர்கள் கூறவே பெற்றோர்களுக்குச் சந்தேகம் வந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இன்று பள்ளி விடுமுறையா என்று கேட்டுள்ளனர். அப்படியெல்லாம் விடவில்லையே என்று அங்கு கூறியுள்ளனர்.
இதையடுத்து பஞ்சாயத்துத் துணைத் தலைவரைக் கூப்பிட்டு விஷயத்தைக் கூறினர் பொதுமக்கள். பின்னர் அனைவரும் பள்ளிக்கூடத்திற்கு வந்தனர். அங்கு செம மப்பில் இருந்த ஆரோக்கியசாமியிடம் என்ன சமாச்சாரம் என்று விசாரித்துள்ளனர். அதேசமயம், கல்வித்துறை அதிகாரிகளும் தகவல் அறிந்து விரைந்து வந்தனர். பின்னர் ஆரோக்கியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தான் தண்ணி அடிப்பதற்காக பள்ளிக்கே லீவு விட்டு ஆசிரியரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.