வாக்கிங் போன பெண்ணிடம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க செயின் பறிப்பு
செங்கோட்டை: செங்கோட்டையில் வாக்கிங் போன பெண் ஒருவரின் கழுத்தில் கிடந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை மர்ம மனிதர் பறித்துச் சென்றார்.
தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்வெட்டு நேரம் அதிகமாக உள்ளது. இரவு, பகல் என்று நேரம் காலம் இல்லாமல் மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த மின்வெட்டால் மக்கள் தவித்தாலும் திருடர்கள் குஷியாக இருக்கின்றனர். இருட்டிய வேளையில் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.
இதனால் கடந்த ஒரு மாத காலமாக தென்காசி பகுதியில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் செங்கோட்டை இலத்தூர் சாலையில் இன்று காலை பிச்சம்மாள் என்ற பெண் வாக்கிங் போனார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் பிச்சம்மாளின் கழுத்தில் கிடந்த 80 கிராம் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடி விட்டார். அந்த சங்கிலியின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இது குறித்து பிச்சம்மாள் போலீசில் புகார் கொடுத்தார்.