2 தேமுதிக எம்எல்ஏக்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன்: எம்எல்ஏ பார்த்திபனின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: தேமுதிக எம்எல்ஏக்களான மோகன்ராஜ் மற்றும் சுபாவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த 26ம் தேதி இரவு தேமுதிக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதாவை தேமுதிகவினர் தரக்குறைவாக பேசுவதாக அதிமுகவினர் ரகளை செய்தனர்.
இந் நிலையில் கூட்ட முடிவில் போலீசார் மேடை அருகே வந்து, முதல்வரை தரக்குறைவாக பேசியதாக தேமுதிக பேச்சாளர் துரை.கருப்பழகியை கைது செய்ய வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். துரை.கருப்பழகியை கைது செய்ய விடாமல் அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து தலைவாசல் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிக எம்எல்ஏக்கள் கெங்கவல்லி சுபா, மேட்டூர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந் நிலையில் எம்எல்ஏ சுபாவை கைது செய்ய போலீஸார் சென்றபோது, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக எம்எல்ஏ பார்த்திபன் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேனியில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாகப் பேசியதாகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந் நிலையில் எம்எல்ஏக்கள் மோகன்ராஜ், சுபா ஆகியோர் தாங்கள் கைதாகாமல் இருக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்ற நீதிபதி, மோகன்ராஜ், சுபாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இருவரும் 4 வார காலத்துக்கு தினமும் தலைவாசல் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பார்த்திபனின் ஜாமீன் மனு தள்ளுபடி:
அதே நேரத்தில் இந்த வழக்கில் கைதான எம்எல்ஏ பார்த்திபன் உட்பட 8 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை ஆத்தூர் விரைவு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.