பள்ளிமாணவர்கள் தற்கொலை, குடும்ப வன்முறை தமிழ்நாட்டில் அதிகம்: மத்திய அரசு தகவல்
மரணத்தை தழுவும் மாணவர்கள்
ஒழுக்கத்தையும், சமுதாயத்தை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று போதிக்க வேண்டிய பள்ளி, கல்லூரிகளில்தான் மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஆசிரியர் திட்டிவிட்டார், பள்ளி, கல்லூரி தேர்வுகளில் தோல்வி, காதல் தோல்வி என பல காரணங்களினால் மாணவர்கள் மரணத்தின் பாதையை தேர்தெடுக்கின்றனர். இதனால் ஊடகங்களில் மாணவர் தற்கொலை தொடர்பான செய்திகள் அடிபட்ட வண்ணம் இருக்கின்றன.
மத்திய அமைச்சரின் பதில்
மாணவர்களின் தற்கொலை தொடர்பாக மக்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர் கிருஷ்ணா தீரத், ‘பள்ளி அல்லது கல்லூரிகளில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் 36 வழக்குகளை கையாண்டுள்ளது என்றார். இது தொடர்பாக தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 21 புகார்களும், ஆந்திராவில் இருந்து 4 புகார்களும் வந்துள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வன்முறைகள் அதிகம்
தேசிய குற்ற ஆவணப் பிரிவு வெளியிட்டுள்ள பட்டியலின்படி, கடந்த ஆண்டு நாடு முழுவதும் 9431 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில்தான் குடும்ப வன்முறைகள் அதிக அளவில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 3983 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியிருக்கின்றனவாம். இதில் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் அதிகம் உள்ளன.
குஜராத்திற்கு இரண்டாம் இடம்
அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 3266 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 1661 வழக்குகளும் பதிவாகியிருப்பதாக தேசிய குற்ற ஆவணப் பிரிவு கூறுகிறது.
2010ல் அதிகம் வன்முறை
கடந்த 2010-ம் ஆண்டில் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 11 ஆயிரத்து 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2009-ல் 7 ஆயிரத்து 803 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி கிருஷ்ணா தீரத் தெரிவித்துள்ளார்.
வன்முறையை தடுக்க நடவடிக்கை
நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் தமிழ்நாட்டில் சட்டரீதியாக பதிவானவை நான்காயிரத்தை எட்டியுள்ளது. புகார் செய்யப்படாமல் விடப்பட்டவை பத்தாயிரத்தை எட்டும் என்கிறது ஒரு புள்ளிவிபரம். வன்முறையை பற்றி அறிவிக்கும் அரசுகள் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுக்க சட்டங்களையும் தண்டனைகளையும் கடுமையாக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.