ராகு – கேது பெயர்ச்சி: திருநாகேஸ்வரத்தில் பரிகார பூஜைக்கு குவிந்த பக்தர்கள்
கும்பகோணம்: ராகு பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியடைந்ததைஒட்டி கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிகார பூஜை செய்தனர்.
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் கோவில் நவக்கிரக தலங்களில் ராகு பகவானுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு ராகு பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இன்று காலை 10.53 மணிக்கு ராகுபகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
ராகு பெயர்ச்சியை ஒட்டி ராகு சன்னதியில் கடந்த 26-ந்தேதி முதல் பரிகார லட்சார்ச்சணை நடைபெற்று வந்தது. நேற்று இரவு முதல் கட்ட சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இன்று காலை 10 மணிக்கு ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 10.53 மணிக்கு ராகு பகவானுக்கு மகா தீபாராதனைகளும் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நாகை மாவட்டம் கீழ்வேளூர் வேதபுரீஸ்வரர் கோவிலிலும் ராகு கேது பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. நவகிரகங்கள் மற்றும் சேசபுரீஸ்வரர், அபிராமி அம்பாள் ஆகியோருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
கேது பகவான் சன்னதி
நாகை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள கேது பகவான் பரிகாரத்தலம் அமைந்துள்ளது. இங்கு கேது பெயர்ச்சி விழாவை ஒட்டி சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. கேது பகவான் காலை 10.53 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்ந்தார். இதனையொட்டி காலையில் விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கேது பரிகார பூஜையுடன் தீபாராதனையுடன் மகாஅபிசேகமும் காலை 10.53 மணிக்கு கேது பெயர்ச்சி மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
லட்சுமி குபேரர் ஆலயம்
வண்டலூர் அருகே ரத்னமங்கலம் ஸ்ரீலட்சுமி குபேரர் சன்னதியிலும், 107 அம்மனுடன் நடுநாயகமாக வீற்றிருக்கும் 108வது அம்மனான அரைக்காசு அம்மன் சன்னதியிலும், ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு, ராகுவின் அதிதேவதையான அம்மனுக்கும், கேதுவின் அதிதேவதையான விநாயகப் பெருமானுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
காலை நவக்கிரக சாந்தியும், ராகுவிற்கு பாலாபிஷேகம், நீல மலர்களால் பூஜை, முழு உளுந்தால் ஆன நைவேத்யமும் படைக்கப்பட்டது. இதேபோல் கேதுவிற்கு பலவண்ண மலர்களால் பூஜையும், கொள்ளாலான நைவேத்யம் செய்யப்பட்டது.
ராகுவின் அதிதேவதையான 108 அம்மனுக்கும் எலுமிச்சம் பழமாலை சாற்றி குங்கும அர்ச்சனை செய்யப்பட்டது. கேதுவின் அதிதேவதையான சோட்டி விநாயகர்களுக்கு தேங்காய்மாலை சாற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்யப்பட்டது. பரிகார பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்ரீகுபேர பகவானுக்கு சாற்றி எடுத்த பணமாலை நோட்டு வழங்கப்பட்டது.