போபால் விஷவாயு விபத்து: 28 ஆண்டுகள் கழிந்தும் அகற்றப்படாத கழிவுகள்… விஷமாகும் நிலத்தடிநீர்
போபால்: போபால் விஷவாயு விபத்து நடந்து 28 ஆண்டுகள் முடிந்துவிட்டபின்னரும் யூனியன் கார்பைடு ஆலையில் உள்ள கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் அங்கு நிலத்தடிநீர் விஷமாகிவிட்டது என்று ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
விடியாமல் போன இரவு
நாளை விடியும் என்ற நம்பிக்கையில்தான் இதேநாளில் 28 ஆண்டுகளுக்கு முன்னர் உறங்கப்போனார்கள் போபாலில் வசித்த மக்கள். ஆனால் இரவோடு இரவாக விஷவாயுவில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் பலியாகிப்போனார். விபத்து நடந்து 28 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் தலைமுறை தலைமுறையாக பாதிப்புகளை சந்தித்து வரும் அந்த மக்களுக்குத்தான் உரிய நிவாரணம் இன்னமும் கிடைக்கவில்லை.
துயரம் நிகழ்ந்த நள்ளிரவு
அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்ட யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் என்ற நிறுவனத்தின் துணை அமைப்பான யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனம் போபாலில் செயல்பட்டு வந்தது. 1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாள் நள்ளிரவு நேரம் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியான மெதில் ஐசோ சயனைட் எனப்படும் நச்சு வாயுவில் சிக்கி 25000 பேர் பலியாகிப் போனார்கள்.
உலகின் மோசமான விபத்து
உலகின் மிகப் மோசமான தொழிற்சாலை விபத்தென உலகமே அலறியது. இந்த விபத்தில் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டனர். சரி செய்ய முடியாத அளவிற்கு சுற்றுசூழல் நாசம் ஏற்பட்டது. ஆனால் அன்றைக்கு இந்தியாவை ஆண்டவர்களின் கண்களும், காதுகளும் மூடிக்கொண்டன.
அரசின் பொய்யான அறிக்கை
விபத்து நடந்தபின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் விஷவாயுவை சுவாசித்த 36 கர்ப்பிணிப் பெண்களுக்கு உடனடியாகக் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், 21 குழந்தைகள் குறையுடன் பிறந்ததாகவும், 27 குழந்தைகள் இறந்தே பிறந்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த ஆலையானது, விபத்து ஏற்பட்ட பிறகு அரசால் மூடப்பட்டது.
26 ஆண்டுகள் காத்திருப்பு
விபத்திற்குக் காரணமான குற்றவாளிகளைத் தண்டிக்க கோரியும், இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இழப்பீடு கோரி பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. நீதித்துறை இவ்வழக்கை மிகவும் தாமதமாக நடத்தியது. இறுதியில் 178 சாட்சிகளுடன் 30,000 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வழக்கில் 26 ஆண்டுகள் காத்திருக்கும்படி செய்தார் நீதிபதி மோகன் திவாரி.
தாமதிக்கப்பட்ட நீதி
இந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம், குற்றம்சாட்டப்பட்ட 8 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. உடனே அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ஆண்டர்சன் குறித்து தீர்ப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் குமுறல்.
பூசி மெழுகும் மத்திய அரசு
மத்திய அரசு 2006 அக்டோபர் 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்த உறுதிமொழி அறிக்கையில் மொத்தம் 5,58,125 பேர் விஷவாயு விபத்தின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 92.5% அதாவது 5,16,406 பேர் மிகவும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 38,478 பேர் (6.8%) தற்காலிக நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் வெறும் 0.7 சதவீதத்தினர், அதாவது 3,241 பேர் மட்டுமே முழு அளவில் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அகற்றப்படாத கழிவுகள்
மூடப்பட்ட கார்பைடு ஆலையில் 44,000 கிலோ நச்சு தாரும், 35,000 கிலோ அல்பா நெப்தாலுமர் என்ற ரசாயனமும் திறந்த வெளியில் டிரம்மிலும், கோனிப்பையிலும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் போட்டு வைக்கப்பட்டுள்ளது. 23,000 டன் வேதிப்பொருட்கள் தரையில் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இன்றைக்கும் 18,000 டன் நச்சுக்கழிவுகள் அங்கிருக்கும் விஷகுளத்தின் அடியில் புதையுண்டுள்ளது.
விஷமாகும் நிலத்தடி நீர்
அத்தொழிற்சாலை தொடங்கி நாற்பது ஆண்டுகளாக அவை மழையால் பெரும்பகுதி மண்ணிலும், நிலத்தடி நீரிலும் கலந்து தொடர்ந்து இன்றும் மக்களுக்குக் கெடுதலை எற்படுத்தி வருகின்றது. இது குறித்து இன்ஸ்டிடியூட் டாக்சிகல் ரிசர்ச் நிறுவனம் அங்கு 26 இடங்களில் நிலத்தடி நீரை சேகரித்து ஆய்வு மேற்கொண்டதில் அங்குள்ள நிலத்தடி நீர் அபாயகரமான நிலையில் உள்ளதாக எச்சரித்துள்ளது. ஆயிரக்கணக்கான மெட்ரிக் டன் ரசாயனக் கழிவுகள் அங்கு கொட்டிக்கிடக்கின்றன. இதனால் மரணத்தின் பிடியில் போபால் மக்கள் சிக்கியுள்ளனர். இதைப்பற்றி சிந்திக்காமல் மத்திய அரசும், மாநில அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நீதி கேட்டு போராட்டம்
மரணத்தின் மடியில் இருந்தாலும் இன்றைக்கும் நீதி கேட்டு போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர் மக்கள். ஆனால் இந்த இந்த மண்ணை ஆள்பவர்களின் செவிகளுக்குத்தான் அவை இன்னமும் எட்டவில்லை. நாட்டில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் அக்கறையில் சிறிதளவேணும் மண்ணின் மைந்தர்களை காப்பாற்றுவதில் செலுத்தவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.