என் கணவர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டார்: நீதிபதியிடம் பிரபு மனைவி புகார்
எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரை மானாமதுரை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் சுட்டுக்கொன்றனர். இது போலி என்கவுன்டர் என்றும் நீதிவிசாரணை வேண்டும் என்றும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கோரியிருந்தர். இதனையடுத்து இளையாங்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி தலைமையில் நீதிவிசாரணை நடைபெறும் என்று அரசு அறிவித்தது.
இதனையடுத்து மானாமதுரையில் ஞாயிறன்று நீதி விசாரணை தொடங்கியது. நீதிபதி மகேந்திரபூபதி காலை முதல் மாலைவரை மேற்கொண்ட விசாரணையில் பிரபு மற்றும் பாரதியின் உறவினர்கள் உட்பட சுமார் 30 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதியிடம் பேசிய பிரபுவின் மனைவி ரோஜா, தனது கணவர் திட்டமிட்டு கொல்லப்பட்டதாக புகார் தெரிவித்தார்.
இதனிடையே, சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மீதான வழக்குகள் மற்றும் குற்றச் செயல்கள் குறித்த விவரங்களை நீதிபதியிடம் போலீசார் எடுத்துக் கூறினர். மேலும், என்கவுன்ட்டர் ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்தும் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். என்கவுன்டரில் கொல்லப்பட்ட பிரபு பாரதியின் மீது மானாமதுரை, திருப்பாச்சேத்தி, சிவகங்கை ஆகிய காவல் நிலையங்களில் 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
என்கவுண்டர்-டி.எஸ்.பி. வெள்ளத்துரை மீது கொலை வழக்கு கோரி வழக்கு:
இந் நிலையில் சிறைவாசிகள் உரிமைகள் மையத்தின் இயக்குனரான வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் தாக்கல் செய்துள்ள மனுவில்,
சிவகங்கை மாவட்டம் தீத்தன்கோட்டை அருகே பிரபு, பாரதி என்ற 2 விசாரணை கைதிகள் போலீஸ் பிடியில் இருந்து தப்பி சென்றபோது நடந்த என்கவுண்டரில் கடந்த மாதம் 30ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்த டி.எஸ்.பி. வெள்ளத்துரை தற்காப்புக்காக இருவரையும் போலீசார் சுட்டு கொன்றதாக கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவில் போலீஸ் என்கவுண்டரில் குற்றவாளிகளை சுட்டு கொன்ற போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் வெள்ளத்துரை டி.எஸ்.பி. மீது கொலை வழக்கு பதிவு செய்யும்படி உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு மனு கொடுத்தேன். ஆனால் வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே 2 விசாரணை கைதிகளை சுட்டுக் கொன்ற வெள்ளத்துரை மீது கொலை வழக்கு ப்பதிவு செய்ய வேண்டும். சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.