யாழ் பல்கலை மாணவர்கள் கைதுக்கு யு.எஸ். கண்டனம்: ஆனால், இந்தியா அமைதி!
சென்னை: இலங்கையில் யாழ்பாணப பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தையொட்டி கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி, அதற்கு தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்கள். மேலும் கார்த்திகை தீபத்தையொட்டி இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில், வீடுகளில் ஏற்றி வைத்த விளக்குகளையும்கூட சிங்கள ராணுவத்தினர் அடித்து நொறுக்கி ஈழத் தமிழர்கள் மனதை காயப்படுத்தியிருக்கிறார்கள்.
மாவீரர் தினத்தையொட்டி 27ம் தேதியன்று வீர வணக்கம் செய்து கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களை சிங்கள ராணுவத்தினர் தாக்கியிருக்கிறார்கள்.
இது குறித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும், சிங்களவருமான சஞ்சீவ பண்டார பேட்டி அளிக்கையில், யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கப்பட்டது, மற்றும் நான்கு மாணவர்களின் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்; கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
யாழ் பல்கலைக் கழகத்தில் நடந்த தாக்குதலைக் கண்டித்து இலங்கையின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் காலவரையறையற்ற வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியை அமெரிக்கத் தூதரகம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுபற்றி இந்தியத் தூதரகமும் விசாரித்து, இந்திய அரசிடம் தெரிவித்து, அரசின் சார்பில் வன்மையான கண்டனத்தை ராஜபக்ஷேயின் சிங்கள அரசுக்கு தெரிவித்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.