மதுவுக்கு அடிமையாகும் நகர்ப்புற இந்தியப் பெண்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்
டெல்லி: இந்தியாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்களில் பெரும்பாலோனோர் மதுவிற்கு அடிமையாகி இருப்பதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. பணிச்சூழல், மனஅழுத்தம், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களே அவர்களை மதுவிற்கு அடிமையாக்கியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் மதுவிற்கு அடிமையான பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் நிபுணர்கள்.
அளவிற்கு அதிமாக மது அருந்தும் பழக்கம் உள்ள பெண்கள் ஒருபோதும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் மதுவுக்கு அடிமையாவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
மதுவிற்கு அடிமையாகும் பெண்கள்
அரசு அளித்துள்ள புள்ளிவிபரம் ஒன்றின்படி நகர்புறங்களில் 21 சதவிகித இளைஞர்களும், 2 சதவிகித பெண்களும் மதுவிற்கு அடிமையாகி உள்ளதாக தெரிகிறது. இளம்பெண்கள் மத்தியில் குடிப்பழக்கம் அதிகரித்து வருவதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். ஆண்களை விட பெண்கள் மதுவுக்கு அடிமையாவதைப் போலவே மது தொடர்பான நோய்களுக்கும் அடிமையாகின்றனர்.
ஜாலியாக தொடங்கிய பழக்கம்
தெரிந்தோ தெரியாமலோ பார்ட்டிக்கு போய் ஜாலிக்காக மதுவை தொட்டு பின்னர் அதற்கு அடிமையானவர்கள்தான் அதிகம் என்கின்றனர் நிபுணர்கள். பொதுவாக ஆண்களுக்கும், பெண்களுக்கு உடல் ரீதியாக நிறைய வித்தியாசங்கள் உண்டு... ஆண்கள் குடிக்கிறார்கள் என்பதற்காக பெண்களும் மதுவை குடிக்க ஆரம்பித்தால் அவர்களுடைய உடல்நிலை மிக மோசமாகும்.
விரைவில் மரணம் வரும்
மது குடிக்கும் பெண்களுக்கு முகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. ஆண்களைப் போலவே பெண்களின் முகம் இறுக்கமடைகிறது. இதற்கு கல்லீரலில் ஏற்படும் பிரச்சினைகள்தான் என்கின்றனர். ஆல்கஹாலின் தாக்கத்தால் கல்லீரல் சுருங்கி, கொழுப்பு அதிகமாகி விடுவதால், என்சைம்களில் அதிக சிக்கல் உண்டாகும். ஆண்களைவிட பெண்களுக்கு கொழுப்பு அதிகம் என்பதால், வெகுவிரைவில் கல்லீரல் கெட்டு, ரத்தத்திலும் மதுவின் தன்மை அதிகம் கலந்து விடும். சில நேரங்களில் மரணம் ஏற்படும் அபாயமும் உண்டு என்று எச்சரிக்கின்றனர்.
இதயம் வெடிக்கும்
மதுவினால் பெண்களுக்கு கல்லீரலோடு, இதயமும் சேர்ந்து பாதிக்கும். இதனால் பெண்களுக்கு மன அழுத்தமும், மதுவின் தாக்கமும் ஒன்றுசேர, இதயநோய் அழையா விருந்தாளியாக வந்து புகுந்து கொள்கிறது. மது குடிப்பதால் ரத்த அழுத்தம் அதிகமாகி, இதயத்தை பலவீனபடுத்தும். இதனால் ரத்த அழுத்தத்தை தாங்காமல் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் வீங்கும்.சிலருக்கு அழுத்தம் அதிகமாகும்போது வெடித்து விடும் அபாயமும் உண்டு.
மார்பகப் புற்றுநோய் தாக்கும்
அமெரிக்க மெடிக்கல் அசோசியேஷன் சார்பில் வெளிவரும் மருத்துவ இதழில் மது குடிக்கும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் தாக்கும் அபாயம் அதிகரிக்கும் என்று கூறியிருந்தனர். அதாவது தினமும் முன்று கப் ஆல்கஹாலை குடிக்கும் பெண்களுக்கு 41 சதவீதம் மார்பக புற்று நோய் அதிகமாக தாக்கும் என்று எச்சரித்தனர்.
இந்தியப் பெண்களின் உடல் அமைப்பு
வெளிநாட்டு பெண்களின் உடல் மதுவை தாங்கும் அளவுக்கு இந்திய பெண்களின் உடல் தாங்காது. நம்முடைய பாரம்பரியத்தின் காரணமாக நமது நாட்டின் பெண்களின் உடல் ஆல்கஹாலை எதிர்த்து போராடாது. மது அருந்தும் பெண்களின் இனப்பெருக்க திறனும் பாதிக்கப்படும். மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது இந்திய பெண்கள் குடிக்கும் மதுவின் அளவு குறைவுதான் என்றாலும், தினமும் மது குடிக்கும் பெண்களுக்கு, ஆல்கஹாலின் தாக்கத்தால் மாதவிலக்கு ஒழுங்காக வராது.
எலும்புகள் செயலிழக்கும்
மது அருந்தும் பெண்களின் எலும்பின் உறுதி பலவீனமாகி, முட்டு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக மது குடிக்கும் வயதான பெண்களுக்கு இந்த பிரச்சினை மிக அதிகமாகத் தோன்றும். மேற்கத்திய நாடுகளில் உள்ள பெண்களை விட இந்திய பெண் களுக்கு எலும்புகள் உறுதியாக இருந்தாலும், ஆல்கஹாலின் தாக்கத்தால் படிபடியாக அவை செயலிழக்க ஆரம்பித்து விடும்.
மூளை நரம்புகள் பாதிக்கும்
தினமும் மது அருந்தும் பெண்களின் முளை மற்றும் நரம்புகள் பாதிக்கபட்டு, மன அழுத்தம், மறதி, திடீர் பதட்டம், திடுக்கிடுதல் போன்ற உணர்ச்சிகள் மேலோங்கும் என்று ஸ்டான்போர்டு மருத்துவ பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும்பாலும் மதுவுக்கு அடிமையாகும் பெண்கள் திடீர் என்று தற்கொலை செய்து கொள்கின்றனர்.
கவுன்சிலிங் அவசியம்
மதுவிற்கு அடிமையாகும் பெண்களை கவுன்சிலிங் மூலம் குணப்படுத்த முடியும். இதற்காகவே பல தொண்டு நிறுவனங்கள் மது அடிமை மறுவாழ்வு தரும் மையங்களை நடத்தி வருகின்றன. 6 வாரங்கள் வரை அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதன் மூலம் மதுவிற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க முடியும் என்றும் கூறுகின்றனர் நிபுணர்கள். டெல்லியில் உள்ள கவுன்சிலிங் மையத்தில் 6 வாரத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனராம். எனவே இதுபோன்ற மையங்களுக்கு சென்று கவுன்சிலிங் பெறுவதன் மூலம் மதுவின் பிடியில் இருந்து மீள வாய்ப்புள்ளது என்பது நிபுணர்களின் கருத்து.