எதியூரப்பா இல்லாமல் புதிய கட்டிடத்தில் நாளை துவங்கும் கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர்
பெல்காம்: கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் நாளை பெல்காமில் உள்ள சுவர்ண சவுதாவில் தொடங்குகிறது. பாஜகவில் இருந்து எதியூரப்பா விலகிய பிறகு நடக்கும் முதல் கூட்டத் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சட்டசபையின் 2வது தலைமைச் செயலகமான பெல்காமில் கட்டப்பட்ட சுவர்ண சவுதா கட்டிடத்தை அண்மையில் தான் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிடத்தில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்கி வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
கூட்டத் தொடருக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த சபாநாயகர் போப்பையா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் புதிதாக பெல்காமில் கட்டப்பட்டுள்ள சுவர்ண சவுதாவில் நாளை துவங்குகிறது. கூட்டத் தொடரையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபப்ட்டுள்ளன. இந்த கூட்டத்தில் மொத்தம் 16 சட்டவரைவு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. நகருக்கு வெளியே சுவர்ண சவுதா உள்ளதால் எம்.எல்.ஏ.க்களின் வசதி கருதி பெல்காமில் இருந்து பஸ் விடப்படுகிறது என்றார்.
இந்நிலையில் இந்த கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டு்ள்ளன. கடந்த 40 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா கடந்த வெள்ளிக்கிழமை அன்று கட்சியில் இருந்து விலகினர். மேலும் வரும் 9ம் தேதி புதிய கட்சியைத் துவங்குகிறார். எதியூரப்பா இல்லாமல் இந்த கூட்டத் தொடர் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கூட்டத்தொடர் துவங்குவதையொட்டி பெல்காம் நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட எஸ்.பி. சந்தீப் கூறுகையில்,
சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் எந்த பிரச்சனையும் இன்றி நடக்க 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் ஷிப்ட் முறையில் 24 மணிநேரமும் பணியாற்றுவார்கள். இது தவிர சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பிற மாவட்ட போலீசாரின் உதவியை நாடியுள்ளோம். முக்கிய இடங்களில் 200 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 20 மோப்ப நாய்கள் மற்றும் 16 அசம்பாவித தடுப்பு போலீஸ் குழுக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றார்.