டாஸ்மாக் கடை முன்பு மக்கள் கூட்டம்.. பார்த்து அதிர்ந்து போன ஜெயலலிதா!
முன்பெல்லாம் தமிழகத்தில் வீதிக்கு வீதி கோவில்களைத்தான் கட்டுவார்கள். ஆனால் இப்போதோ அதை பீட் செய்யும் அளவுக்கு டாஸ்மாக் கடைகள் பெருக ஆரம்பித்துள்ளன. டாஸ்மாக் கடைகளின் பெருக்கத்தால் தமிழகத்தில் குடிகாரர்கள் எண்ணிக்கை பெருத்து பல்வேறு குற்றச் செயல்கள், மரணங்கள், வறுமை, ஏழ்மை அதிகரித்து விட்டதாக கடும் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் சாலையோரமாக உள்ள டாஸ்மாக் கடைகளை மூட அரசு முடிவெடுத்துள்ளதாம். அதாவது மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை மூடப் போகிறார்களாம்.
நெடுஞ்சாலைகளில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு டிரைவர்கள் குடிபோதையில் இருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்குப் போய் நன்றாக குடித்து விட்டு பலர் வண்டி ஓட்டுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டே சாலைகளில் உள்ள கடைகளை மூட அரசு முடிவெடுத்துள்ளதாம்.
இந்த திடீர் முடிவுக்கு முதல்வர் ஜெயலலிதாதான் காரணம் என்று கூறுகிறார்கள். அதாவது சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதா சென்னை நீலாங்கரை சாலையில் சென்றபோது தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்த டாஸ்மாக் கடைகளில் வாகன ஓட்டிகள் பலர் நின்று கொண்டிருந்தனர்.
இப்படி மது குடிக்க திரண்டிருந்தவர்களைப் பார்த்து முதல்வர் அதிர்ந்து போனாராம். இவர்கள் இப்படி குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் எப்படி சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று யோசித்த அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டதாக டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது.
அம்மாவின் கண் திறந்து விட்டது.. படிப்படியாக மற்ற கடைகளையும் மூடி விட்டால் பெரும் நிம்மதியாக இருக்கும் என்று தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.