புதுவை உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி-காங். அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது புதுவையில், அதிமுக, என்.ஆர். காங்கிரஸ், சிபிஐ ஆகியவை இணைந்து போட்டியிட்டன. மறு முனையில் திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து போட்டியிட்டன. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணிகள் மாறிப் போயின.
தேர்தல் முடிந்த கையோடு என்.ஆர். காங்கிரஸும், அதிமுகவும் பிரிந்து விட்டன. அதேபோல தி்முக கூட்டணியை விட்டு பாமக போய் விட்டது. இந்த நிலையில் தற்போது அங்கு உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பாமக மட்டும் வெளியேறி உள்ளது. மற்ற கட்சிகளுடனான கூட்டணி தொடருகிறது. தற்போதும் பாராளுமன்றத்தில் அன்னிய முதலீட்டு தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது. இதனால் புதுவையில் உள்ளாட்சி தேர்தலில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடனான கூட்டணி தொடரும்.
ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியால் புதுவை மாநிலம் வளர்ச்சியில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரம் சரிந்து விட்டது. இத்தகைய சூழலில் நிலையான ஆட்சியையும், மலர்ச்சியையும் காங்கிரசால் மட்டுமே தரமுடியும்.
எனவே சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காமல் கட்சியை விட்டு வெளியேறியவர்கள், சுயேச்சையாக போட்டியிட்டவர்கள் மீண்டும் காங்கிரசுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். இதேபோல் ஒத்த கருத்துடைய கட்சிகளும் எங்கள் அணிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.