எப்டிஐயை எதிர்க்கிறோம்... இருந்தாலும் அரசை எதிர்த்து ஓட்டு போட விரும்பவில்லை- திமுக
லோக்சபாவில் நேற்று சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு விவகாரம் தொடர்பான ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் தொடங்கியது. அதில் கலந்து கொண்டு டி.கே.எஸ். இளங்கோவேன் பேசுகையில்,
நாட்டில் 30 கோடி பேர் சொந்தமாக கடை வைத்து வர்த்தகம் செய்து வருகின்றனர். அன்னிய நேரடி முதலீட்டால் அவர்கள் பாதிக்கப்படுவர். இந்த முடிவுக்கு திமுக எதிராக உள்ளது என்பதை எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளோம்.
சீனா போன்ற நாடுகளில் வால்மார்ட் தோல்வி அடைந்துள்ளது. இந்தியாவில் ஏன் வால்மார்ட் நுழைய அனுமதிக்கப்படுகிறது?
மாநிலங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த இத்திட்டத்தைக் கொண்டு வருகிறோம் என மத்திய அரசு கூறுகிறது. அதனால் இதற்கு திமுக ஆதரவளிக்கிறது. இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து செயல்பட விரும்பவில்லை.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய முதல் கட்சி திமுகதான். இருந்தாலும் மத்திய அரசை எதிர்த்து ஓட்டு போட திமுக விரும்பவில்லை.
இந்த விவகாரத்தில் ஒரு கை காயம் அடைந்தது என்பதற்காக முழு உடல் பரிசோதனைக்கு மத்திய அரசை உள்படுத்த நாங்கள் விரும்பவில்லை.
இந்த விவகாரத்தில் இன்னும் நேரம் இருக்கிறது. நாங்களும் மத்திய அரசுடன்தான் இருக்கிறோம். உங்களைக் கண்காணித்துத் தேவைப்படும் இடத்தில் திருத்துவோம். இந்த நாட்டுக்காக இணைந்து பல நல்லதை செய்துள்ளோம் என்றார் இளங்கோவன்.