தர்மபுரி கலவரத்திற்கு பாமக, வன்னியர் சங்கம் காரணம் அல்ல: ஜி.கே. மணி
பாமக ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கர்நாடக முதல்வரை சந்தித்து பேசியும் தண்ணீர் தர மறுப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்திற்கு பாமகவும், வன்னியர் சங்கமும் காரணம் அல்ல. அந்த கலவரத்திற்கு பாமக தான் காரணம் என்று சிலர் குற்றம் கூறி வருகிறார்கள். அது தவறான கருத்து.
அங்கு கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள 142 பேரில் பலர் திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதில் 14 கல்லூரி மாணவர்களும் அடக்கம்.
காதல் திருமணங்களுக்கு பாமக எதிரான கட்சி அல்ல. ஆனால் காதல் என்ற பெயரில் பெண்களை கடத்தி பணம் பறிப்பது, அப்பாவி பெண்களை ஏமாற்றுவதைத் தான் கண்டிக்கிறோம்.
எங்கள் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் திருமாவளவன், வீரமணி போன்றவர்களை எங்களுக்கு எதிராக சிலர் பேச விட்டு பாமகவை அசிங்கப்படுத்தப் பார்க்கிறார்கள். அதனால் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது என்றார்.