தமிழ-கேரள எல்லை சோதனைச் சாவடியில் ஒரேயொரு எஸ்.ஐ., ஒரேயொரு ஏட்டு
நெல்லை: பாபர் மசூதி இடிப்பு தின நினைவுநாளையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வரும் வேளையில் செங்கோட்டை புளியரை சோதனைச் சாவடியில் ஒரு எஸ்.ஐ. மற்றும் ஒரு ஏட்டு மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு நாளையுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்பட்டுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக, கேரள எல்லையான செங்கோட்டை, நாகர்கோவில் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைத்து வாகனங்களும் முழுமையாக சோதனை செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
ஆனால் புளியரை சோதனைச் சாவடியில் ஒரு எஸ்.ஐ., ஒரே ஒரு ஏட்டு ஆக இருவர் மட்டுமே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது சபரிமலை சீசன் காலம் என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் புளியரை வழியாக கேரளா செல்கின்றன. இதனால் நெல்லை மாவட்ட காவல்துறை உடனடியாக அதிக போலீசாரை அந்த சோதனைச் சாவடியில் நியமித்து இரு மாநில எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்திட வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாப்பில்லாத எல்லையாக செங்கோட்டை புளியரை எல்லைப் பகுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.