பாபர் மசூதியை இடித்தவர்களை கைது செய்யக் கோரி நாளை தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
சென்னை: பாபர் மசூதியை இடித்த சங் பரிவார் அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தியும், மசூதி இடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் டிசம்பர் 6ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைத்தலைவர் முஹம்மத் முனீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாபர் மசூதி சம்பந்தப்பட்ட வழக்குகளை உடனே துரிதமாக முடிக்கவேண்டும். பாபர் மசூதியை இடித்த சங்பரிவார் அமைப்பினை தடை செய்யவேண்டும். பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி சென்னையில் கலெக்டர் அலுவலம் அருகே காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இதேபோல் மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, சேலம், ஈரோடு, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், கடலூர் பரங்கிப்பேட்டை, காரைக்குடி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, புதுச்சேரி உள்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். திருப்பூரில் தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெறும் எனவும் முஹம்மத் முனீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.