அன்னிய முதலீட்டில் மத்திய அரசின் 'கொலவெறி' - ராஜ்யசபாவில் அதிமுக சாடல்!
அன்னிய முதலீடு தொடர்பாக லோக்சபாவில் பாரதிய ஜனதா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. இந்நிலையில் ராஜ்யசபாவில் அன்னிய முதலீட்டுக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்து அதிமுகவின் எம்.பி. மைத்ரேயன் விவாதத்தைத் தொடங்கி வைத்தார்..
மைத்ரேயன் பேசுகையில், இந்த விவகாரத்தில் மாநில அரசுகளை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. இது தொடர்பாக வாக்குறுதி அளித்தபடி மாநில முதல்வர்கள் கூட்டத்தையும் நடத்தவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது இதே பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் எதிர்த்தனர். ஆனால் இப்போது சோனியாவை அமெரிக்கா வலியுறுத்தியதால் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அன்னிய முதலீட்டுக்கான அனுமதி மூலம் 4 கோடி சில்லறை வர்த்தகர்களை ஒழிக்க நினைக்கிறதா? மத்திய அரசு.
மைனாரிட்டி ஐக்கிய முற்போக்குக் கூட்டண் அரசு கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இதே ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும் கூட இந்த விவகாரத்தில் ஒற்றுமை இல்லை. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டின் விவசாயிகளுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. மத்திய அரசு, இந்த 'கொலவெறி'க்கு பாடம் கற்றுக் கொள்ளலாம்
எங்களது கட்சித் தலைவர் புரட்சித் தலைவி அவர்கள் அன்னிய முதலீட்டுக்கான அனுமதியை தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வருகிறார். தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
அதன் பின்னர் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜேட்லி பேசுகையில்,
மக்களவையில் மத்திய அரசால் பெரும்பான்மைக்குரிய 272 எம்.பிக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. மத்திய அரசாங்கமானது ஒரு செயலற்ற நிலையில்தான் இருக்கிறது. இதர கட்சிகளின் வாக்குகளைப் பெறுவதற்கு சமரசம் செய்ய வேண்டிய நிலைக்குப் போனது மத்திய அரசு.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டால் அதிகளவில் வெளிநாட்டுப் பொருட்கள்தான் இறக்குமதியாகப் போகிறது. வெளிநாட்டுப் பொருட்களை அதிகம் வாங்கக் கூடிய நாடாக இந்தியா மாறிவிடும்.
வால்மார்ட் இந்தியாவில் நுழைவதற்கும் சீனாவில் நுழைவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வால்மார்ட் ஏற்கெனவே விற்பனை செய்து வரும் பொருட்களில் 95 விழுக்காடு, சீனாவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதே மாடலை இந்தியாவில் பின்பற்ற முடியாது. வெளிநாட்டுப் பொருட்களை நமது மக்கள் வாங்க நேரிட்டால் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் முடங்கிப் போய்விடும்.
இப்படி வெளிநாட்டு நிறுவனங்களை நாம் அனுமதிப்பதன் மூலம் இந்தியாவானது "சேல்ஸ் பாய்ஸ்/கேர்ல்ஸ்" நாடாக உருமாறிப் போய்விடும்.
இந்தக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். அரசைக் காப்பாற்றும் கட்சிகள் ஒருமித்த குரலில் இதனை நிராகரிக்க வேண்டும். இந்தக் கொள்கை நமது நாட்டுக்குக் கேடாது என்றார் அவர்.