''ஆமாம், நான் ஜாதி வெறியன்தான்''... டாக்டர் ராமதாஸ் பரபரப்புப் பேச்சு
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூரில் நடந்த பாமக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசிய அவர்,
நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து, டாக்டராக வேலை பார்த்ததில் இருந்து, வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கியப் பின்பு வரை நான் ஜாதி வெறியன் தான். என் மக்கள் முன்னேற வேண்டும், படிக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும். 3 வேளை வயிறார சாப்பிட வேண்டும் என நினைப்பவன் ராமதாஸ் மட்டும்தான்.
மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்கள் வன்னியர்கள். நம்மைக் கண்டால் யாருக்கும் பிடிக்கவில்லை. தீப்பந்தம் எடுத்துச் சென்று கொளுத்துவதாக பிரசாரம் செய்கிறார்கள். நமது கைகளை வெட்டுவதாக கூறுகிறார்கள்.
நாம் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னால் உன் பெண்ணை கொடுக்கிறாயா என்று கேட்கிறார்கள். நமது பெண்களுக்கு காதல் வலை வீசி கடத்திச் செல்கிறார்கள். பெண்ணை பெற்றவர்கள் உஷாராக இருக்க வேண்டும். படிக்க வைக்கும் போது யாரையாவது துணைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள வன்னியர்கள் ஒட்டு மொத்தமாக மாம்பழத்திற்கு தான் ஓட்டுப்போட வேண்டும் என்ற முடிவுக்கு வாருங்கள். இரட்டை இலை, சூரியன், கைக்கு போட்டால் நமக்கு நாமே அழித்துக் கொள்வதாகும். வன்னியன் மாம்பழத்திற்கு ஓட்டுப் போடுங்கள்.
ராமதாஸ் இருக்கும் போது வன்னியர் ஆட்சி வரவேண்டும். வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் நாம் ஆளலாம். தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு அக்னி சட்டி, மஞ்சள் கொடி பறக்க வேண்டும்.
2016ம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அப்படியே வெற்றி பெறுவோம். எல்லோரும் விழிப்பாக இருங்கள் சிந்தியுங்கள் மற்ற கட்சிகளை மறந்து பாமகவை நினையுங்கள் என்றார்.
காவிரி: இந்திய இறையாண்மையை பாதுகாக்க வேண்டும்-ராமதாஸ்:
இந் நிலையில் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக, சம்பா பயிர்களை காப்பதற்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க கர்நாடக அரசு மறுத்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய போவதாகவும் கர்நாடகம் கூறியிருக்கிறது. தேசிய ஒமைப்பாட்டுக்கு எதிரான கர்நாடகத்தின் இத்தகைய செயல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
தமிழகத்தில் சம்பா பயிர்களைப் காக்க 60 டிஎம்.சி தண்ணீர் தேவைப்படும் நிலையில், அதில் இருப்பதில் ஒரு பங்கை மட்டும் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது யானைப் பசிக்கு சோளப்பொரியாக அமைந்திக்கிறது. அதுமட்டுமின்றி, இனி திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீரின் அளவை காவிரி கண்காணிப்புக் குழுவின் மூலம் தான் தீர்மாணிக்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதும் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.
டிசம்பர் மாதத்திற்கு சுமார் 5 டி.எம். ஜனவரி மாதத்திற்கு சுமார் 1.25 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி கண்காணிப்புக் குழு ஆணையிட முடியும். ஏற்கனவே உள்ள நிலுவை தண்ணீரை திறந்துவிடும்படி ஆணையிட தங்களுக்கு அதிகாரம் இல்லை என கண்காணிப்புக் குழு ஏற்கனவே கூறியிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்திற்கு சிறிதளவு மட்டும் தண்ணீரை கொடுத்து ஏமாற்றிவிடலாம் என்ற கர்நாடகத்தின் திட்டத்திற்கு உச்சநீ திமன்றம் தெரிந்தோ, தெரியாமலோ துணை போயிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இவ்வளவு குறைகள் இருக்கும் போதிலும், இதைக்கூட நிறைவேற்ற முடியாது என கர்நாடகம் கூறியிருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் விடப்பட்ட சவால் ஆகும்.
பிரதமர், காவிரி கண்காணிப்புக் குழு, உச்ச நீதிமன்றம் என எந்த ஒரு அதிகாரமளிக்கப்பட்ட அமைப்பையும் கர்நாடக அரசு மதிக்காததையும், அதை மத்திய அரசு கண்டிக்காததையும் பார்க்கும் போது, இந்தியாவின் ஆளுகைக்குள் கர்நாடகம் இருக்கிறதா அல்லது கர்நாடகத்தின் ஆளுகைக்குள் இந்தியா இக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. இந்தபோக்கு தொடர அனுமதித்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்பதால், இந்திய அரசியல் சட்ட பிரிவு 356 அல்லது 365 ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தி கர்நாடகம் மீது நடவடிக்கை எடுத்து, தமிழகத்திற்கு காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறந்து விடப் படுவதை உறுதி செய்யவேண்டும்; இதன்மூலம் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.