உலகின் உயரமான பெண் புற்றுநோயால் மரணம்
சூசெங்: உலகின் மிக உயரமான பெண்மணி என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த யாவ் டெபன் (40) புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார்.
கிழக்கு சீனாவில் உள்ள சூசெங்கில் 1972-ம் ஆண்டு பிறந்த இவர், பிட்யூட்டரி சுரபியின் அபார செயல்பாடு காரணமாக, தனது 15வது வயதில் 6 1/2 அடி உயரம் இருந்தார்.
தொடர்ந்து அவரது வளர்ச்சி, உச்சகட்ட உயரமான 7 அடி 8 அங்குலத்தை எட்டியது. உடல் எடையும் 200 கிலோவுக்கு மேல் அதிகரித்தது. உலகிலேயே மிக உயரமான பெண்ணாக இவரை அங்கீகரித்து, கின்னஸ் புத்தகம் சான்றிதழ் வழங்கியது.
பின்னர் 2006-ம் ஆண்டு, ஷங்காய் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் நடந்த அறுவை சிகிச்சையில், இவரது தலையில் இருந்த புற்றுக்கட்டி அகற்றப்பட்டது. ஆபரேஷனுக்கு பிறகு அவரது உயரத்திலோ, எடையிலோ வளர்ச்சி ஏதும் உண்டாகவில்லை. எனினும் மறுபடியும் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இம்முறை எலும்பு புற்றுநோய் அவரை தாக்கியது.
இந்நிலையில் சமீப காலமாக உயர் ரத்த அழுத்தம், எலும்பு புற்று நோயும் சேர்ந்து அவரை அதிகமாக சோதித்ததில் கடந்த மாதம் அவர் சூசெங் நகரில் உள்ள பூர்வீக வீட்டில் மரணமடைந்தார்.
மரணம் குறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜாங் கூறியதாவது:
நவம்பர் 13ம் தேதி காலை 9 மணி இருக்கும் அப்போதுதான் யாவ் டெபன் காலை உணவு சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து அவளுடைய அம்மா அவளை எழுப்பும் போது அவள் தனது மூச்சை நிறுத்தியிருந்தாள் என்று கூறியுள்ளார். இந்த தகவலை சீனாவில் உள்ள அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.