கப்பன் பார்க்கில் உட்கார்ந்து புல்லைப் பிடுங்கினால் தப்பாப்பா...??
பெங்களூர்: பெங்களூரின் புகழ் பெற்ற கப்பன் பூங்காவுக்கு வந்து அங்கிருந்த ஒரு பூச்செடியைப் பிடுங்கிய ஒருவரைப் பிடித்து போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர். பெங்களூரைப் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது இந்த சம்பவம்.
கண்கவர் கப்பன் பூங்கா
பெங்களூன் கண்கவர் அட்ராஷ்க்ஷனில் ஒன்றுதான் கப்பன் பூங்கா. பரந்து விரிந்திருக்கும் இந்த கப்பன் பூங்காவுக்கு வந்து ஆற அமர்ந்து உட்கார்ந்ததன் விளைவை இன்று சிறையில் வருத்தத்துடன் எண்ணிக் கொண்டிருக்கிறார் கோலாரைச் சேர்ந்த வெங்கடேஷ்.
அப்படி என்னதான் செய்தார் வெங்கடேஷ்?
38 வயதான வெங்கடேஷ் கப்பன் பூங்காவில் வந்து ஓய்வாக உட்கார்ந்துள்ளார். அப்போது அங்கு வளர்க்கப்பட்டு வந்த பூச் செடி ஒன்றைப் பார்த்த அவர் அதில் ஆர்வமாகி அதைப் பிடித்து இழுத்தார். பூச்செடி பிய்த்துக் கொண்டு கையோடு வந்து விட்டது.
கையும் களவுமாகப் பிடித்த போலீஸார்
அவ்வளவுதான், அதைப் பார்த்து விட்ட போலீஸார் ஓடி வந்து வெங்கடேஷைப் பிடித்துக் கைது செய்வதாக கூறினர். இதைக் கேட்டு அதிர்ந்து போனார் வெங்கடேஷ். ஏதோ தெரியாமல் செய்து விட்டதாக அவர் கூறினார். ஆனால் அதை போலீஸார் ஏற்கவில்லை.
செடியைத் திருடுறாங்க பாஸ்...
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், கப்பன் பூங்காவில் அடிக்கடி பூச்செடிகளையும், நாற்றுக்களையும் திருடிக் கொண்டு போய் விடுகிறார்கள். இதற்கு முடிவே இல்லாமல் போய் விட்டது. அதுதான் இப்போது புகார் கொடுத்து ஒருவரைக்கைது செய்ய வைத்துள்ளோம் என்றனர்.
புல்லைக் கூட பிடுங்காதீங்க ப்ளீஸ்!
இனிமேல் கப்பன் பூங்காவுக்குப் போனால் பேச்சோடும், படுத்துத் தூங்குவதோடும், கனவு கண்டு விட்டு கவிதை எழுதுவதோடும் திரும்பி வந்து விடுங்கள்.. மறந்து போய் புல்லைக் கூட பிடுங்கிடாதீங்க..
லால்பாக் பக்கம் போனாலும் இதையே பாலோ பண்ணுங்க...!