ராஜ்யசபா.. எப்டிஐ ஓட்டெடுப்பில் மத்திய அரசு வென்றது எப்படி?
டெல்லி: எப்டிஐ விவகாரத்தில் இன்று ராஜ்யசபாவில் விவாதமும் வாக்கெடுப்பும் நடந்தது. அதிலும் மத்திய அரசு வென்றுள்ளது.
ராஜ்யசபாவில் மொத்தமுள்ள எம்பிக்கள் எண்ணிக்கை 244. அதில் ஓட்டெடுப்பில் வெல்ல 122 எம்பிக்களின் ஆதரவு தேவை.
இதில் நியமன எம்.பிக்கள் 10 பேரில் சச்சின் தெண்டுல்கர், நடிகை ரேகா, காங்கிரஸின் முரளி தியோரா ஆகிய 3 பேர் தனிப்பட்ட காரணங்களுக்காக இன்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் வாக்கெடுப்பில் வெல்ல 241 பேரில் (244-3=241) பாதி அளவான 121 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால், நியமன எம்பிக்கள் 7 பேரையும் சேர்த்து காங்கிரஸ் கூட்டணிக்கு 97 எம்பிக்களின் ஆதரவே இருந்தது. இது போக லாலுவின் கட்சி எம்பிக்கள் 2 பேரின் ஆதரவைச் சேர்த்தால் 99 பேரின் ஆதரவு இருந்தது.
இதனால் வாக்கெடுப்பில் வெல்ல மேலும் 22 எம்பிக்களின் ஆதரவு காங்கிரசுக்குத் தேவைப்பட்டது. இந் நிலையில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 9 எம்பிக்கள் ஓட்டெடுப்புக்கு சற்று முன் வெளிநடப்பு செய்துவிட்டனர். இதனால் அவையில் இருந்த எம்பிக்களின் எண்ணிக்கை 232 (241-9=232) ஆகக் குறைந்தது.
இதனால் ஓட்டெடுப்பில் 232 எம்பிக்களில் பாதி அளவான 116 பேரின் ஆதரவு இருந்தாலே அரசுக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடித்துவிட முடியும் என்ற நிலை உருவானது.
இந் நிலையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்கள் அரசை ஆதரித்து வாக்களித்தால் எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக 123 வாக்குகளும், தீர்மானத்துக்கு ஆதரவாக (அரசுக்கு எதிராக) 109 வாக்குகளும் மட்டுமே கிடைத்தன.
இதன்மூலம் பாஜக-அதிமுக-இடதுசாரிகள் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக உருவாக்கிய நெருக்கடியை காங்கிரஸ் கூட்டணி முறியடித்துவிட்டது.
இப்போது லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் எப்டிஐக்கு எதிரான தீர்மானங்கள் தோற்றுவிட்டதால், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விரைவில் அமலுக்கு வரவுள்ளது.