காவிரி நீர்: கண்காணிப்புக் குழு உத்தரவை ஏற்க மறுத்து ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பிடிவாதம்!
தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதைத் தொடர்ந்து ஒருநாள் தாமதமாக தண்ணீரைத் திறந்துவிட்டது கர்நாடகா. அதன் பின்னர் கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், டெல்லியில் கடநத 2 நாட்களாக முகாமிட்டு ஆலோசனை நடத்தினார். நேற்று கண்காணிப்புக் குழுக் கூட்டத்தின் முடிவிலும் தமிழகத்துக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால் காவிரி கண்காணிப்புக் குழுவின் உத்தரவை எதிர்த்து காவிரி நதிநீர் ஆணையத்திடம் முறையிடுவோம். எந்தவித அடிப்படையும் இல்லாமல், 12 டி.எம்.சி. நீரை திறந்துவிடுமாறு காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டிருக்கிறது. வறட்சி கால தண்ணீர் பங்கீடு திட்டத்தின் கீழ் டிசம்பரில் 6. 12 டிஎம்சி நீர்தான் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்பது கண்காணிப்புக் குழுவின் முந்தைய திட்டம். ஆனால் இப்பொழுது 12 டிஎம்சி நீர் திறக்க சொல்கிறது என்று ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்திருந்தார்.
இன்றும் டெல்லியில் ஜெகதீஷ் ஷெட்டரின் ஆலோசனை நீடித்தது. பிரதமரை சந்திக்க முயற்சித்தார். ஆனால் அவரால் பிரதமரை சந்திக்க முடியவில்லை. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், காவிரி கண்காணிப்புக் குழு முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்து காவிரி நதிநீர் ஆணையத் தலைவரான பிரதமரிடம் மறுசீராய்வு மனுவைக் கொடுப்போம் என்று மீண்டும் கூறியுள்ளார்.