மார்கழி மாதப்பிறப்பு: திருமலை ஏழுமலையான் கோவில் சுப்ரபாத சேவை ரத்து
திருப்பதி: மார்கழி மாத பிறப்பை ஒட்டி, திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவிலில் இம்மாதம், 16ம் தேதி முதல், ஜனவரி, 14 ம் தேதி வரை, சுப்ரபாத சேவை ரத்து செய்யப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
தனுர்மாதம் எனப்படும் மார்கழி மாதம் டிசம்பர் 16ம் தேதி பிறக்கிறது. இதனையொட்டி திருமலை வெங்கடாசலபதி ஆலயத்தில் ஆண்டாளின் திருப்பாவை பாசுரம், மூலவரின் முன் திருப்பள்ளி, எழுச்சி பாடலாக பாடப்படும். இதையொட்டி கோவிலில், மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை, சுப்ரபாத சேவை ரத்து செய்யப்படுகிறது.
ஆண்டாள் பாடிய திருப்பாவை பாசுரங்களை, திருமலையில், மார்கழி மாதம் முழுவதும் கோவில் அர்ச்சகர்கள், மூலவரின் முன், திருப்பள்ளி எழுச்சி பாடலாக பாடி, ஐதீக முறைப்படி பூஜை செய்வர். மேலும் திருமலையில் கோவில் அர்ச்சகர்களில் ஒரு பிரிவினர், தினமும் அதிகாலை, 3:00 மணிக்கு, தெப்பக்குளத்தில் நீராடிய பின், நான்கு மாட வீதிகளில், ஆண்டாளின் பாசுரங்களை தமிழில் பாடி செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
திருமலையில் மட்டுமல்லாது திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல்பட்டு வரும், சீனிவாசமங்காபுரம், அப்பளாய குண்டா, நாராயணவனம், நாகலாபுரம், நகரி, சத்திரவாடாவில் உள்ள பெருமாள் கோவில்களிலும், திருப்பள்ளி எழுச்சி பாடலாக திருப்பாவை பாசுரம் பாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.