எப்.டி.ஐ. ல் மத்திய அரசு வெற்றி- அமெரிக்கா மகிழ்ச்சி
வாஷிங்டன் : சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் நுகர்வோர்களும், விவசாயிகளும் நன்மையடைவார்கள் என்று அமெரிக்கா கூறியுள்ளது. எப்.டி.ஐ வாக்கெடுப்பு இந்திய நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றதற்கும் அந்நாடு வரவேற்பு தெரிவித்துள்ளது.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் அரசின் முடிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் வெளிநடப்பு காரணமாகவே ஓட்டெடுப்பில் அரசுக்கு வெற்றி கிடைத்தது. எனினும் தார்மீக ரீதியில் இந்த விவகாரத்தில் அரசு தோல்வியடைந்து எனவே அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது என்றும் பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓட்டெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர், இந்திய நாடாளுமன்றத்தின் இந்த முடிவை அமெரிக்கா வரவேற்பதாக கூறினார்.
இதன் மூலம் சிறு வர்த்தகர்கள், விவசாயிகள் மற்றும் நுகர்வோர் என அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள் என்றும், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு மேலும் வலுப்படும் என்றும் மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதி, சிறு வர்த்தகம், விவசாயம் ஆகிய துறைகளில் முதலீட்டை அதிகரிக்கச் செய்வதுடன், உணவுப் பொருட்களின் விலையை குறையச் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.