சோனியாவின் பிறந்த நாளை கறுப்பு நாளாக கடைபிடித்த தெலுங்கானா மக்கள்
ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா பகுதிகளை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்க கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வந்தது. இவற்றின் உச்சமாக 2009-ம் ஆண்டு போராட்டங்கள் அமைந்தன. அப்போது மத்திய அரசு, தனித் தெலுங்கானா மாநிலம் விரைவில் உருவாகும் என்று அறிவித்தது.
ஆனால் அரசு அறிவித்தபடி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படவில்லை. அதனால் ஆண்டுதோறும் மத்திய அரசு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றாததைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவின் பிறந்த நாளை கறுப்பு தினமாக தெலுங்கானா பகுதி மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
இன்றும் சோனியாவின் பிறந்தநாளை தெலுங்கானா மக்கள் கறுப்பு நாளாக கடைபிடித்தனர். தெலுங்கானா பகுதி மக்களின் உணர்வுகளை மதித்து அப்பகுதியில் பாதயாத்திரை மேற்கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகனின் சகோதரி ஷர்மிளா தனது பயணத்தை இன்று ஒருநாள் ரத்து செய்திருக்கிறார். ஆனால் தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அடிலாபாத் மாவட்டத்தில் இன்றும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.