பாபநாசம் வனப்பகுதியில் வாக்கிங் செல்ல தடை
நெல்லை: பாபநாசம் சோதனைச் சாவடியில் இருந்து லோயர் டேம் வரை வாக்கிங் போக தடை விதிக்கப்பட்டுள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் நேற்று முதல் பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டது. இதனால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் படையெடுக்கத் துவங்கிவிட்டனர். மேலும் ஐயப்ப பக்தர்கள் கூட்டமும் நிரம்பி வழிகிறது.
பாபநாசம் சோதனைச் சாவடியில் இருந்து லோயர் டேம் வரை தினமும் காலை, மாலை வேளைகளில் விகேபுரம் மற்றும் பாபநாசம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வாக்கிங் செல்வது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் முதல் வாக்கிங் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் மாலையில் வாக்கிங் சென்றவர்கள் ஏமாற்றதுத்துடன் திரும்பினர். பல ஆண்டுகளாக வாக்கிங் சென்று வந்த
நிலையில் இப்போது ஏன் தடை போட்டுள்ளனர் என பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,
கடந்த 5 மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படாததால் வனப்பகுதியில் விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தன. வாக்கிங் செல்பவர்கள் அதிகாலை 5 மணிக்கே வந்து விடுகின்றனர். இதுபோல மாலையில் வாக்கிங் செல்பவர்கள் இரவில் தான் திரும்புகின்றனர். அந்த நேரங்களில் வனவிலங்களால் அவர்களுக்கு ஆபத்து நேரக்கூடும். இதனை தடுக்க வனத்துறை புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர உள்ளது. வாக்கிங் செல்பவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க உள்ளோம். அதற்குரிய கட்டணமும் அவர்களிடம் வசூலிக்கப்படும்.
மேலும் அவர்கள் காலை, மாலையில் எந்த நேரத்தில் வாக்கிங் செல்ல வேண்டும் என நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படும். பொதுமக்கள் நலன் கருதி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றனர்.