ஆந்திரா அரசியலுக்குத் திரும்பும் ஜெயப்பிரதா: ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் இணைய திட்டம்?
ஆந்திரா மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரியை சேர்ந்த ஜெயப்பிரதா, தமிழ், தெலுங்கு சினிமா உலகில் கொடிகட்டிப் பறந்தவர். 1994-ம் ஆண்டு என்.டி.ராமராவ் அழைப்பின்பேரில் தெலுங்குதேசம் கட்சியில் இணைந்த அவர், என்.டி.ராமராவின் மறைவுக்குப் பின்னர் டெல்லி மேல்-சபை எம்.பி. ஆனார். கட்சியின் மகளிர் அணித்தலைவி பதவியையும் பிடித்தார்.
இந்த நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு அவருக்கு மேல்-சபை எம்.பி. பதவியை மேலிடம் மீண்டும் தரவில்லை. தெலுங்குதேசம் கட்சியின் மகளிர் அணித்தலைவி பதவியிலிருந்து ஜெயப்பிரதாவை நீக்கி விட்டு அந்த இடத்துக்கு நடிகை ரோஜாவை நியமித்தது.
அதைத் தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து விலகிய ஜெயப்பிரதா, உத்தரபிரதேசம் சென்று சமாஜ்வாடி கட்சியில் ஐக்கியமானார். 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அங்குள்ள ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
அமர்சிங்குக்கும் சமாஜ்வாடி கட்சி மேலிடத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமர்சிங்குடன் சமாஜ்வாடி கட்சியிலிருந்து ஜெயப்பிரதா வெளியேறினார். அதன்பிறகு அரசியலில் அவரால் ஜொலிக்க முடியவில்லை.
இந்த நிலையில் ஐதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயப்பிரதா, உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், தன் இதயமும், ஆன்மாவும் ஆந்திராவை சுற்றியே இருப்பதாக தெரிவித்தார்.
2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது,மீண்டும் தான் ஆந்திர அரசியலுக்கு திரும்ப விரும்புவதாகவும் கூறினார். இது குறித்து எதிர்காலத்திட்டத்தை விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறினார். ஆந்திராவுக்கு திரும்பியபிறகு எந்தக்கட்சியில் சேரப்போகிறார் என்பதை தெரிவிக்க ஜெயப்பிரதா மறுத்து விட்டார். எனினும் அவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.