சந்திரபாபுவின் பாதயாத்திரையில் பாதுகாப்புக்கு வரும் நக்சல் ஸ்வர்ணாக்கா
சந்திரபாபு நாயுடு தற்போது அடிலாபாத் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டிருக்கிறார். அவர் நிர்மல் சட்டசபை தொகுதியில் நேற்று பாதயாத்திரை போனார். அப்போது அவருக்கு முன்பாக ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ரமாதேவி என்பவர்தான் பொதுமக்கள் கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். இந்த 'வல ரமாதேவிதான்' நக்சல் ஸ்வர்ணாக்கா!
கோட்டபள்ளி பகுதியைச் சேர்ந்த ரமாதேவி, தமது 11வயதில் நக்சல் இயக்கத்தில் இணைந்து ‘ஸ்வர்ணாக்கா'வானார். 1990களில் சென்னூர் பிரதேசத்தில் நக்சல்கள் வலுவாக இருந்தபோது முக்கியமானவராக இருந்தார் ஸ்வர்ணாக்கா. பின்னர் சென்னூர் நக்சல் தளபதி ராமண்ணாவையே திருமணம் செய்து கொண்டார். 1993-ல் நக்சலைட் அமைப்பைவிட்டு வெளியேறி சரணடைந்தார். பின்னர் சிறைவாசத்துக்குப் பிறகு ஆந்திர மாநில ஊர்க்காவல் படையில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
தற்போது நிர்மல்-1 போலீஸ் ஸ்டேஷனில் ஊர்க்காவல் பிரிவு கான்ஸ்டபிளாக இருப்பதால் அங்கு வந்த சந்திரபாபு நாயுடுவுக்கான பாதுகாப்பு பணியில் இணைக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு நக்சல்களின் தாக்குதலில் சிக்கி உயிர் தப்பியவர்தான் சந்திரபாபு நாயுடு. எந்த நக்சலைட்டுகளால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதோ அதே நக்சல் அமைப்பைச் சேர்ந்தவர்தான் இன்று அவரைப் பாதுகாக்கவும் செய்கிறார்!