சமயபுரம் கோவில் உண்டியல் அருகே கிடந்த 4 மாத பெண் குழந்தை
திருச்சி: திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் அருகே 4 மாத பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று காலையில் கோவில் மா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் அருகே 4மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று நீண்ட நேரமாக தனியாக அழுது கொண்டிருந்தது. இதைக் கண்ட பக்தர்கள் சிலர் அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு பெற்றோர்கள் யார் என்று விசாரித்தனர். ஆனால் குழந்தைக்கு யாருமே சொந்தம் கொண்டாடவில்லை என்பதால் கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து கோவில் அதிகாரிகள் போலீசில் புகார் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், குழந்தையை தூக்கிக்கொண்டு கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் தாயை தேடி பார்த்தனர். ஆனால் யாரும் வரவில்லை.
பெற்றோர் இன்றி நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்த குழந்தை மயக்கமடையும் நிலை ஏற்பட்டதால் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அந்த குழந்தையை அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அந்த குழந்தை அரசு தொட்டில் குழந்தைகள் மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பிறந்த குழந்தையை தவிக்கவிட்டுச் சென்ற கல்நெஞ்சம் படைத்த பெற்றோர் யார் என்றும் போலீசார் தேடி வருகின்றனர்.