வால்மார்ட் 'லாபி' விவகாரம்- விசாரணை நடத்தத் தயார்- மத்திய அரசு அறிவிப்பு
லோக்சபா ஒத்திவைப்பு
இன்று காலை லோக்சபா தொடங்கியதும் கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு வால்மார்ட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாஜக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் ஜீரோ நேரத்தில் வாய்ப்பளிப்பதாக சபாநாயகர் மீரா குமார் உறுதி கூறினார். இதை ஏற்க மறுத்து பாஜகவினர் தொடர் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் அமளி ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகளை ஒரு மணிநேரம் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். பின்னர் பகல் 12 மணிக்கு அவை கூடிய போது பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா இந்த விவகாரம் தொடர்பாக பேசினர். ஆனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியினர், பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரும் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்அக்ளை எழுப்பினர். இடதுசாரிகளும் வால்மார்ட் விவகாரத்தில் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் பெரும் அமளி நிலவியது.
அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், இது தொடர்பாக விசாரணை நடத்தவும் விவாதம் நடத்தவும் மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றார். இருப்பினும் தொடர் அமளியால் பிற்பகல் 2 மணி வரை சபையை ஒத்திவைப்பதாக சபாநாயர் மீராகுமார் அறிவித்தார்.
ராஜ்யசபாவில்..
ராஜ்யசபாவும் இன்று காலை கூடியதும் பாஜகவினர் வால்மார்ட் விவகாரத்தையும் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் இடஒதுக்கீடு விவகாரத்தையும் கையிலெடுக்க சபை அமளிக்காடானது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த சபைத் தலைவர் ஹமீத் அன்சாரி, சிறிய அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், "தொடர்ந்து கேள்வி நேரம் இடையூறு செய்யப்பட்டு வருகிறது. இதைத்தான் இந்த நாற்காலியில் அமர்ந்து இத்தனை நாட்களாகப் பார்த்து வருகிறேன். இது தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. கேள்வி நேரத்தை மற்றொரு நாளுக்கு ஒத்தி வைப்பது என்பது அல்லது கேள்வி கேட்க எவருக்கும் விருப்பம் இல்லையெனில் கேள்வி நேரத்தையே நிறுத்திவிடுவது என்று கூறிய வேகத்தில் சபையை 30 நிமிடம் ஒத்தி வைக்கிறேன் என்று கூறி விருட்டென வெளியேறினார்.
பின்னர் முற்பகல் 11.36க்கு ராஜ்யசபா கூடிய போதும் பாஜகவின் வெங்கையா நாயுடு எழுந்து வால்மார்ட் விவகாரத்தால் நாடே கொந்தளிப்புடன் இருக்கிறது. அதனால் அது பற்றி உடனே விவாதிக்க வேண்டும் என்றார். ஆனால் ஹமீத் அன்சாரியோ, பகல் 12 மணிக்கு பிறகு விவாதிக்கலாமே என்று கூறிப் பார்த்தார். ஆனால் பாஜகவினர் தொடர்ந்தும் வலியுறுத்த பகல் 12 மணி வரை சபையை ஒத்திவைப்பதாக அன்சாரி அறிவித்தார்.
பகல் 12 மணிக்கு அவை கூடியபோது வால்மார்ட் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் அமைச்சர் கமல்நாத் தாக்கல் செய்த அறிக்கையில், வால்மார்ட் விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடவும் விவாதத்துக்கும் அரசு தயாராக இருக்கிறது என்றார்.