கரூரில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் கத்தி முனையில் ரூ.1 கோடி நகை, பணம் கொள்ளை
கரூர்: கரூரில் நள்ளிரவில் வீடு புகுந்து ஒரு கும்பல் ரூ. 1 கோடி மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ளது கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பஞ்சப்பட்டி ஊராட்சி. இதில் கீழ்பஞ்சப்பட்டியைச் சேர்ந்தவர் அரங்கசாமி(68). அவரது மனைவி சிவபாக்கியம். அவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் அழகு ராஜ் திருமணமாகி அதே பகுதியில் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். அவர் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு சென்றுள்ளார்.
இரண்டாவது மகன் கண்ணன் திருச்செங்கோட்டில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படிக்கிறார். மகள் வினோதா சிதம்பரத்தில் மருத்துவம் படித்து வருகிறார். அரங்கசாமி தனது வீட்டின் முன்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரெங்கா பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அந்த நிறுவனத்தில் நகை அடகு வைப்பது, விற்பது உள்ளிட்டவை நடக்கும் என்பதால் லட்சக் கணக்கில் பணப்புழக்கம் இருக்கும். நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்த பிறகு நிறுவனத்தை பூட்டிவிட்டு அரங்கசாமி பின் பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு 2 மணிக்கு 8 பேர் அடங்கிய கும்பல் ஒன்று அரங்கசாமியின் வீட்டுக் கதவைத் தட்டியது. அவர் கதவைத் திறந்ததும் வெறும் ஜட்டி மற்றும் முகமூடி அணிந்திருந்த அந்த கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. அதற்குள் ஏதோ சத்தம் கேட்டு சிவபாக்கியம் எழுந்து வந்து பயங்கர ஆயுதங்களுடன் நின்ற கும்பலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அந்த கும்பல் அரங்கசாமியை ஒரு அறையில் கட்டிப்போட்டு விட்டு சிவபாக்கியத்தின் கழுத்தில் கத்தியை வைத்து பீரோ சாவியைக் கேட்டது. அவர் சாவியைக் கொடுத்ததும் அரங்கசாமியை அழைத்துக் கொண்டு போய் பீரோவை திறக்க வைத்தது. பின்னர் பீரோவில் இருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை அள்ளிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியது.
சத்தம் போட்டால் உங்கள் இருவரையும் கொன்றுவிடுவோம் என்று அந்த கும்பல் மிரட்டியதால் அவர்கள் அமைதியாக இருந்தனர். இதையடுத்து இன்று காலை அரங்கசாமி லாலாப்பேட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அரங்கசாமியின் வியாபாரத்தை நீண்ட நாட்களாக நோட்டமிட்ட யாரோ தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்தால் கரூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.